ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தமிழகத்திலேயே ஐயப்பன் கோவிலை எழுப்புவோம்-தென்காசியில் பரபரப்பு

குற்றாலம்: ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள், உங்கள் பணத்தில் வாழும் கேரள அரசு, உங்களை அடித்து துரத்துவது நியாயமா, ஐயப்பன் கோவிலை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று ஒரு போஸ்டர் குற்றாலம், தென்காசி பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரி்மலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் விரதமிருந்து கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து தமிழகம் வழியாக கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை அம்மாநில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக விரோதிகள் தாக்கி வருகின்றனர். இது தவிர தமிழக அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது வீசி தாக்கி வருவதால் தமிழகத்திலிருந்து கேரள செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாம்பவர்வடகரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மாலையை கழட்டி விரதத்தை முடித்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள்
உங்கள் பணத்தில் வாழும் கேரள அரசு
உங்களை அடித்து துரத்துவது நியாயமா
ஐயப்பன் கோவிலை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஐயப்ப பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், எல்லை பகுதி மலையாளிகளிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: