செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஆழம் பார்க்க தமிழகம் வந்த பிரதமர்,விஜயகாந்தை ஏன் பார்க்கவில்லை?

பிரதமர் தனது இரண்டுநாள் தமிழகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று டில்லி திரும்பினார். சமீப நாட்களில் மத்திய அரசுக்கு எதிரான போக்கு அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் இருந்த காரணத்தால், ஆழம் பார்க்கும் விதத்தில் பிரதமரின் தமிழக விஜயம் திட்டமிடப்பட்டது என்பதை ஊகிப்பதில் சிரமம் ஏதுமில்லை.
மாலை 6.45 மணிக்கு சென்னை வந்திறங்கிய பிரதமரை, கவர்னர் ரோசய்யாவும், முதல்வர் ஜெயலலிதாவும், விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் ஒன்றாக நின்று வரவேற்றனர். மு.க.அழகிரியும் விமான நிலையம் வந்திருந்தார். அமைச்சரவைக் கூட்டங்களில் அழகிரியின் தலை தென்படுவதில்லை. அட்லீஸ்ட் சென்னை ஏர்போர்ட்டிலாவது அவரது தரிசனம் கிட்டியதே என்று பிரதமர் அகமகிழ்ந்திருக்கலாம்)
வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் பலத்த பாதுகாப்புடன் ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். 
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று சில கட்சிகள் அறிவித்திருந்த காரணத்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகக் கடுமையாகச் செய்யப்பட்டிருந்தன.
ராஜ்பவனில் பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து, முல்லைப் பெரியாறு தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி சகிதம் சென்று சந்தித்தார். அவர் தன் பங்குக்கு மனு ஒன்றைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தைச் சந்திக்கும் விஷயத்தில் பிரதமர் வருவதற்கு முன்னரே சில இழுபறிகள் இருந்ததாக தெரிய வருகின்றது. மரபுப்படி பார்த்தால், முதல்வரையும், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தையும் பிரதமர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த தி.மு.க.-வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட காரணத்தாலேயே பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டும் முடிவை கறுப்பு எம்.ஜி.ஆர். எடுத்தார் என்று தெரியவருகிறது. தமது மாநிலத்துக்கு வருகைதரும், நாட்டின் பிரதமரை வரவேற்கவும் அவர் விமான நிலையம் செல்லவில்லை.
இந்த கறுப்புக்கொடி விவகாரத்தை தமிழக அரசு மிக சீரியசான பாதுகாப்பு பிரச்னையான எடுத்துக் கொண்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக,  சென்னை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை வரை எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை மிகப்பெரிய ட்ராபிக் ஜாமை அந்த ஏரியாவுக்கு வெளியே ஏற்படுத்தியது.
மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம்வரை நூற்றுக்கணக்கில் வாகனங்கள் தேங்கி நின்றன. எந்த வாகனமும் நீண்ட நேரத்துக்கு நகர முடியவில்லை.
திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டி கைதானார் விஜயகாந்த். (பிரதமரின் முகத்துக்கு நேரே காட்டவில்லை) பிரதமர் சென்னையை விட்டுக் கிளம்பியதும், இவரையும் வெளியே விட்டுவிட்டது போலீஸ்.
“தமிழகத்தின் எந்தப் பிரச்னையையுமே தீர்த்து வைக்காத பிரதமர் எதற்காக தமிழகம் வரவேண்டும்?” என்று கேட்ட விஜயகாந்த், “முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மீனவர்கள் மீதான தாக்குதல் என எதிலுமே அவர் அக்கறை காட்டவில்லை. அப்படி இருக்கையில் அவர் எதற்காக இங்கு வரவேண்டும்?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்ட முயன்றால் அதையும் தடுத்துக் கைது செய்கின்றனர்” என குற்றம்சாட்டிவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.
பிரதமர் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரைக்குடி செல்லும் முன்பு சென்னை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் செங்கோட்டையன், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே மீனவர் தாக்கப்படும் பிரச்னை, ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட விவகாரம், கூடங்குளம், ஆகியவற்றுடன், தற்போது முல்லைப் பெரியாறு விவகாரம் மாநிலம் முழுவதிலும் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என்று டில்லி நினைத்திருக்கலாம்.
அப்படி எதுவும் கிடையாது என்று பெருமூச்சு விட்டபடி திரும்பிச் சென்றிருப்பார் பிரதமர்.

கருத்துகள் இல்லை: