வியாழன், 29 டிசம்பர், 2011

நடிகை பிரதியூசா கொலை வழக்கு: காதலருக்கான தண்டனை 2 ஆண்டாக குறைப்பு

ஹைதராபாத்: பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மனுநீதி, தவசி, உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரதியூஷா. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஷம் அருந்திய நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரதியூஷாவுடன் விஷம் அருந்தியதாக, அவருடைய காதலர் சித்தார்த்த ரெட்டியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.
பிரதியூஷாவும், சித்தார்த்த ரெட்டியும் குழந்தை பருவத்தில் இருந்தே அறிமுகமானவர்கள். சித்தார்த்த ரெட்டி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சித்தார்த் ரெட்டியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சித்தார்த்த ரெட்டி கூறினார். அந்த திட்டத்தை செயல்படுத்தியபோது, பிரதியூஷா உயிரிழந்தார். சித்தார்த்த ரெட்டி பிழைத்துக்கொண்டார்.
5 ஆண்டு தண்டனை
முதலில், இதை மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை வழக்காக மாற்றினர். பிறகு, இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
நடிகை பிரதியூஷாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும் சித்தார்த்த ரெட்டி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஐதராபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தண்டனை குறைந்தது

இந்த தீர்ப்பை எதிர்த்து, சித்தார்த்த ரெட்டி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரவிசங்கர், சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை 2 ஆண்டு தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். அபராத தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்தும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: