திங்கள், 28 மார்ச், 2022

2 நாள் பாரத் பந்த்; பல மாநிலங்களில் பாதிப்பு; தொழிற்சங்கத்தினர் போராட்டம்

 .hindutamil.in : புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.



நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின் பல மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்குவங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.வங்கி சேவை பாதிக்கும் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல பகுதிகளில் வங்கிப் பணிகளும் பாதித்துள்ளன.

தமிழகத்தில் 50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 25 கோடி பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

எனினும் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உட்பட இடங்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: