ஞாயிறு, 27 மார்ச், 2022

13 வயது மாணவி தற்கொலை முயற்சி - 55 வயது ஆசிரியர் முரளிகிருஷ்ணா பாலியல் சீண்டல்! போக்சோவில் கைது..

 கலைஞர் செய்திகள் :  13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. 55 வயது ஆசிரியர் போக்சோவில் கைது - போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், படித்து வருபவர் கூலித் தொழிலாளியின் 13 வயது மகள். இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர்.



மேலும், இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், 13 வயது மாணவியிடம் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும், 55 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வந்ததாகவும், வகுப்பறையில் தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் பயந்து போன மாணவி மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாது நேற்று மாலை வீட்டில் இருந்த தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த போலிஸார், ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர் வேறேதும் மாணவிகளிடம் இது போன்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆசிரியரே இது போன்ற செயலில் ஈடுபட்டது சக பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: