சனி, 26 ஜூன், 2021

கவிஞர் தாமரைக்கு தோழர் தியாகுவின் மக்கள் சுதா காந்தி எழுதி கொள்வது .. ஒரு அரசியல் + சினிமா குடும்ப பஞ்சாயத்து Part 1

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

சுதா காந்தி தி : கவிஞர் தாமரை அவர்களுக்கு,   
  நான் தோழர் தியாகுவின் மூத்த மகள் சுதா காந்தி எழுதுகிறேன். என் அப்பாவை நீங்கள் ஜூவி மூலம் அறிந்து அவரைப் பார்க்க முகவரி பெற்று என் வீட்டிற்கு வந்து என் அம்மாவை சந்தித்தது நினைவுள்ளதா? என் அப்பாவை சந்திக்கும் முன் நீங்கள் சந்தித்தது என் அம்மாவை. என் அம்மா இப்படி  ஒருவர் வந்தார் எனச் சொல்லித்தான் உங்களை என் அப்பாவிற்கு முதன்முதலில் தெரியும் என்பதை நினைவூட்டுகிறேன். அப்போது நீங்களும் உங்கள் திருமண வாழ்வில் இருந்தீர்கள், என் அப்பாவும் என் அம்மாவுடன் திருமண வாழ்வில் எங்களோடு இருந்தார். அன்று எங்கள் வீட்டில் இருந்த உங்களை ஒருமுறை பார்த்தேன். அதன்பின் உங்களை நான் சுவருக்குள் சித்திரங்கள் வெளியீட்டு விழாவில் பார்த்தேன்.
என் அப்பா உங்களை மணமுடிப்பது தொடர்பாக ஒரு பேருந்து பயணத்தில் என் அம்மாவிடம் தெரிவித்தார். பிள்ளைகளான எங்கள் இருவரிடம் கடற்கரையில் வைத்து தனது மணமுடிக்கும் முடிவைச் சொன்னார். அம்மாவும் சரி நாங்களும் சரி முடிவை ஏற்காது மறுத்துவிட்டோம். இதுவெல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு நான் கல்லூரி படிக்கும் போது உங்களுக்கும் என் அப்பாவிற்கும் திருமணம் ஆனதை குமுதம் இதழ் மூலம் அறிந்தேன். எங்கள் பார்வையில் என் அப்பா செய்தது தவறுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எங்கள் இருவரையும் தொலைவில் இருந்தாலும் அரவணைத்து எங்களுக்குக் கல்வி தந்து எங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்கு இது இழப்புதானே என்ற உணர்வோடுதான் அவர் எல்லாமுமாக அப்போதும் இருந்தார்.



இதோ இன்று எங்கள் அப்பாவை நானும் என் தங்கையும்தான் பார்த்துக் கொள்கிறோம். முழுக்க முழுக்க எங்கள் இருவர் பொறுப்பில் எங்கள் அணைப்பில்தான் அப்பா இருக்கிறார். என்ன இருந்தாலும் அப்பா எங்களுக்காகப் பட்டபாடுகள் அறிவோம். நாங்கள் எங்கள் அப்பாவை அதிகாரம் செலுத்த மகிழ்வோடு எங்களிடம் தன்னை அப்போதும் ஒப்புக் கொடுத்திருந்தார். எங்கள் மீதான அன்பிலும் பொறுப்பிலும் எந்தக் குறையையும் அப்பா வைத்ததில்லை. இன்றும் அந்த அன்புதான் என்னை எழுதத் தூண்டுகிறது.
நீண்ட காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருப்பதை உங்களிடம் கேட்டுவிட வேண்டும். மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்வதற்கு நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டீர்கள். கல்லூரி போய்க் கொண்டிருக்கிற பெண் பிள்ளை உண்டே. அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்று யோசித்திருக்க வேண்டுமா வேண்டாமா. எந்த யோக்யதையில் இன்று உங்கள் நியாயம் பற்றி பேச வருகிறீர்கள்.
நான் CMA முடித்து சட்டம் முடித்த பிறகு மலர் மருத்துவமனையில் கணக்கியலில் துணை மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். நீங்கள் என்னை அழைத்து உங்கள் வீட்டிற்கு வரச்சொல்லிக் கேட்டீர்கள். நானும் வந்தேன்.

என் அப்பா பற்றி குறிப்பாக நீங்கள் சொல்கிற அந்தப் பெண் குறித்துப் பேசினீர்கள்.  ஆதாரங்கள் எனச் சிலதைக் காட்டினீர்கள். மகளை அழைத்து அப்பா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததில் உங்கள் மீது அருவருப்பே மிஞ்சியது.  உங்கள் ஆதாரங்களும் அபத்தமானதாக இருந்தன. நீங்கள் நேர்மையற்றவர் என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டேன். இதை  இங்கே எடுத்துச் சொல்லக் காரணம் இருக்கிறது. அப்பாவை நீங்கள் மணமுடித்த பிறகு பத்தாண்டுகள் கழித்து அதாவது நான் என் கல்வியை எல்லாம் முடித்து ஒரு பணியில் அமர்ந்த பிறகுதான் உங்களிடம் இருந்து முதல் அழைப்பு வருகிறது. அதுவும் என் அப்பா மீது  குற்றஞ்சாட்ட. அப்பாவை நீங்கள் மணமுடித்த பத்தாண்டுகளில் என்னை அழைத்து என் படிப்பு என்ன? நன்றாகப் படிக்கிறேனா? என்றெல்லாம் ஒருமுறையேனும் விசாரித்ததுண்டா?

இன்று வீட்டிற்கு அழைத்தால் வருவேன் பேசுவேன் என்ற நம்பிக்கை இருந்த உங்களுக்கு அதற்கு முன்னால் எங்கள் மீது அக்கறை கொண்டு ஒருமுறையாவது பேசியிருக்கலாமே! நீங்கள் அழைக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. அப்படி ஒரு நிலைக்கு அப்பா எங்களை விட்டதுமில்லை. இப்போது அழைத்தது போல் அப்போது உங்களுக்கு அழைக்கத் தோன்றியது கூட இல்லை என்பதை எடுத்துக்காட்டவே சொல்கிறேன். நான் தியாகுவிடம் விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன் என நீங்கள் சொல்லலாம். இதையும் அவரிடமே விசாரித்து தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே. மகளான என்னை அழைத்ததன் நோக்கம் என்ன? என்னை என் அப்பாவுக்கு எதிராக திருப்பும் உங்கள் கெட்ட எண்ணம்தானே! அன்று என் அப்பாவை மணம் முடிக்கும் போது பிள்ளைகளான எங்கள் குறித்து உங்களூக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. இன்று அப்பாவுக்கு எதிராக என்னைத் திருப்ப மட்டும் நான் உங்களுக்குத் தேவைப்பட்டோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அப்பா ஒரு முறை என்னையும் என் தங்கையையும் பார்க்க வருகிறார். அவர் எங்களோடு நிதானமாக பேசுகிற நிலையில் இல்லை. அத்தனை அழைப்புகள் உங்களிடமிருந்து, எங்களைக் காணத்தான் வந்திருக்கிறார் என்று உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் கத்தி அப்பாவை உடனே வரச் சொல்லிக் கட்டளையிட்டது எங்களுக்கே கேட்டது. அத்தனை அழைப்புகளிலும் வந்துட்டு இருக்கேன் என்று சொல்லியே உங்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார். கடைசியாக நாங்கள் இன்னும் எத்தனை நேரம்தான் வந்துக்கிட்டே இருப்ப, நீ கிளம்பு என்று கோபமாகச் சொல்லி அனுப்பினோம். எங்களோடு அவர் நேரம் செலவிடுவதை எங்கள் மீதான பரிவின் பேரால் கூட உங்களால் பொறுத்திருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட குணம் கொண்ட உங்களுக்கு நீதி பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. ஆனாலும் பேசுவது உங்கள் உரிமை. இனி அதனை எதிர்கொள்வதும் எனதுரிமை.
இனி உங்கள் பதிவிற்குள் நான் வருகிறேன்.

என் அப்பா மீது விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்ததைச் சொல்கிறீர்கள், ஓரளவு விசாரணையை முடித்ததாகவும் சொல்கிறீர்கள்,  அந்தக் கோப்புகள் வீர சந்தனம் ஐயா மறைந்துவிட்டதால் காணாமல் போனது என்கிறீர்கள். அந்த கோப்புகளில் ஒரு படி உங்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குழுவின் ஏனைய நான்கு பேரில் ஒருவரிடமாவது இருந்திருக்க வேண்டும். சரி அது இருக்கட்டும். இப்போது அந்த விசாரணையை விரைவாகத் தொடங்குங்கள். அன்றே விசாரணைக் குழு அமைக்கும் முடிவு தெரிந்த உடனேயே அப்பா அதற்கு ஒப்புக் கொண்டார். வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தும் விட்டார். அந்தக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பை அவர் தந்திருக்கிறார்.
அவர் ஒப்புக் கொள்ளாமல் இந்த விசாரணைக் குழு அமைந்துவிட வில்லை. இப்போதும் அந்த விசாரணையை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருக்கிறார் (அப்பாவிடம் அதை உறுதிப்படுத்தி விட்டே சொல்கிறேன்). உங்களிடம் இப்போது உள்ள ஆதாரங்கள் ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணைக் குழுவின் பணியைத் தொடங்கச் செய்யுங்கள். அந்தக் குழுவில் உள்ள  ஏனைய நான்கு பேரைக் கொண்டு விசாரணையைத் தொடங்கச் செய்வதில் உங்களுடைய நகர்வுகள் என்ன? நீங்கள் அதில் எந்தக் கட்டத்தில் உள்ளீர்கள்? எப்போது நீங்கள் விசாரணையை தொடங்கச் செய்யப் போகிறீர்கள். எந்த விசாரணைக்கும் முழுமையாக உட்பட அப்பாவிற்கு தயக்கம் இல்லை. விரைவில் அப்பணிகளைத் தொடங்க வேண்டுகிறேன்.

நீங்கள் தூசி தட்ட இருக்கிற ஆவணங்கள் ஆதாரங்களில் அடிப்படையானதாக சிலவற்றை நீங்கள் முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்:
1. நீங்கள் வைக்கிற ஆவணங்கள் அல்லது ஆதாரங்களில்   நீங்கள் குறிப்பிடுகிற இந்தப் பெண்ணானாலும் அந்தப் பெண்ணானாலும் அவர்கள் "இன்றும்" அவர்களின் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டும்.
2. அவர்களில் ஒருவரேனும் தியாகு இப்படி நடந்து கொண்டார் என்றோ என்னை அழைத்துக் கொண்டு ஓடிப் போனார் என்றோ இன்று கூட அல்ல, அன்றாவது சொல்லி இருக்க வேண்டும்.
3. அப்பா மீது அவர்கள் வைக்கும் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த இரண்டு பெண்களில் ஒருவரேனும் அவர்கள் அறிந்து அவர்களுக்குத் தெரிந்து முன்வைத்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படைகளில் இருந்தும் உங்கள் ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்குத் தெரியும் இன்றும் அந்தப் பெண்கள் என் அப்பாவை தந்தையாகவே மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் இன்றைக்கும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள், என்பதனால் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். அது போகட்டும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்
.
2012 இல் அந்தப் பெண்ணுடன் ஓடிப் போனதாகச் சொல்கிறீர்கள். அப்போதும் நான் மலர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நேராக என்னைச் சந்திக்க மலர் மருத்துவமனை வந்தார். தங்கும் இடம் குறித்துப் பேசினோம். இளந்தமிழகம் தோழர்கள் செந்தில் ஸ்ரீராம் ஆகியோர் உதவியுடன் அவர்கள் அலுவலகத்தில்தான் அப்பா தங்கி இருந்தார். இன்றும் அதை அந்த தோழர்கள் உறுதி செய்வார்கள்.
2014 இல் ஒரு பெண்ணுடன் ஓடிப் போனதாகச் சொல்கிறீர்கள். அப்போது எனக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகி இருந்தது. உங்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்த நாளிலிருந்து இந்த 10 ஆண்டுகளாக எங்களோடுதான் அப்பா இருக்கிறார். எங்கள் வீட்டில் இருந்ததால்தான் நாங்கள் இருந்த வேளச்சேரி வீட்டு வாசலில் போராட்டம் என நீங்கள் அமர்ந்தீர்கள். அப்போது நான் கருவுற்றிருந்தேன். எங்களோடு வந்து வாழ்கிறார் என்பதால்தானே எங்கள் வீட்டு முன் வந்து போராட்டம் என அமர்ந்தீர்கள். உண்மை இவையாக இருக்க ஓடி போனார் என்கிறீர்களே! இப்படி வேண்டுமானால் சொல்லுங்கள், நீங்கள் சொல்கிற

இருமுறையுமே தியாகு அவர் மூத்த மகளிடம் ஓடிப் போனார் என்று.
அந்தப் பெண் சுமத்திய குற்றசாட்டுகளிலிருந்து திசை திருப்பவே என்று குறிப்பிடுகிறீர்கள். எந்தப் பெண் எப்போது குற்றம் சாட்டினார். என்ன குற்றம் சாட்டினார். ஒரு பொதுவெளியில் தான் அறிந்து தனக்குத் தெரிந்து ஒருவராவது குற்றச்சாட்டு வைத்திருப்பதை உங்களால் காட்ட முடியாது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

என் அப்பா பற்றி சில செய்திகளைப் பகிர வேண்டும். எனக்கு இன்று வரைக்கும் என் இன்ப துன்பங்களில் பங்கேற்கும் எங்கள் குடும்பமே உயர்வாக மதிக்கும் மாமா அத்தை இருக்கிறார்கள். அதில் அந்த அத்தையை என் அப்பா இன்றும் கமலா என்றுதான் அழைப்பார். அத்தையும் என் அப்பாவை தோழர் என்றுதான் அழைப்பார். நான் பிறக்கும் போது சிறையிலிருந்து விடுப்பில் வந்து என் அம்மாவோடு இருந்தவர் உடனே சிறைக்குத் திரும்பிவிடுகிறார். திரும்பிய ஓரிரு மாதங்களில் வெளியே வருகிறார். எதற்கென்றால், எங்கள் அத்தை முழுநேர அரசியலுக்கென்று வீட்டைவிட்டு வந்து விடுகிறார்.

சிறையிலிருந்தபடியே ஓரிரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் விடுப்பில் வந்துவிடுகிறேன் என்று உறுதி தருகிறார். சொன்னபடியே சிறையிலிருந்து விடுப்பில் வந்து, பிறந்த குழந்தையான என்னைப் பார்க்க வராமல் நேரே அத்தையை பார்த்து அவர் அரசியல் வாழ்வு தொடர எல்லாவற்றையும் செய்துவிட்டுத் திரும்புகிறார். அப்பா ஒருவர் தன்னை அரசியலுக்கு ஒப்புக் கொடுக்க வருகிறார் என்றாலோ, ஒருவரை அரசியலாற்றலாய் உருவாக்க முடியும் என்று நம்பினாலோ, அவர்களுக்காக அரசியலை முன்னிட்டு எவ்வளவு பெரிய சுமையை சுமப்பதற்கும் தயாராகவே இருப்பார்.

செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர் பாரதி சுப்ரமணியை அப்பா என் மகன் என்று கொண்டாடியதுண்டு, என்னிடமே அப்படித்தான் ஒரு முறை அறிமுகப்படுத்தினார். இளந்தமிழகம் செந்தில் குறித்து ஒரு மேடையில் பேசும் போது, ஒரு தந்தையாக அவரின் வளர்ச்சியை நெகிழ்வோடும், பெருமிதத்தோடும் பார்க்கிறேன் எனத் நா தழுதழுக்கச் சொன்னார். தோழர் மதியவன் இரும்பொறையை அப்பா மகனாகவே கருதுவார். அவரும் அப்பாவை தந்தை இடத்தில் வைத்திருக்கிறார். இவை எல்லாமே அரசியலை முன்னிட்டுத்தான். அரசியல் உறவுதான் அல்லது அரசியல் உறவின் பொருட்டுத்தான் இந்த உறவுகள் தந்தை மகன் உறவாக மலர்ந்து நின்றன. இன்றும் தோழர் மதியவனும், செந்திலும் அப்பாவின் கைபிடித்து அரசியலில் வளர்ந்து வருகிறவர்கள். இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இந்த உறவுகளின் உயர்வும் அழகும் புரியாது.

பெண் விடுதலைக்கு அடிகோலிய பெரியாரியத்தையும் உங்கள் பதிவில் இழிவுபடுத்துகிறீர்கள். பெண்ணியத்தை ஒரு வாழ்நெறியாகவே அப்பா கொண்டிருந்தார் என்பதை உங்களை வைத்தே என்னால் நிறுவ முடியும். உங்களுடைய உரிமைகளில் எது ஒன்றிலாவது அவர் தலையிட்டிருப்பாரா மனம் தொட்டுச் சொல்லுங்கள். உங்களை ஒரே ஒரு முறையாவது ஒரு கடுஞ்சொல்லாவது பேசியிருப்பாரா சொல்லுங்கள். இன்னும் சொல்லப் போனால் தனது உரிமைக்காக என்று கூட உறுதியாக நில்லாமல், உங்கள் மனநிலைக்காக உங்கள் உடல் நிலைக்காக உங்களுக்காகவே உங்களுக்கு இணங்கிப் போவதையே வழக்கமாக்கி இருந்தார் என்பது எனக்கே தெரியும். அதை என்னால் நிறுவவும் முடியும். என் அம்மாவுடன் அப்பா வாழ்ந்த பதினைந்து ஆண்டுகளில் பெண்ணியம் தெரியாத என் அம்மாவிடமும் அவர் ஒரு கடுஞ்சொல் பேசியதில்லை. அம்மா உரிமையில் தலையிட்டதும் இல்லை. பிள்ளைகளான எங்களிடமும் அவர் அப்படித்தான் இருந்தார், இன்று வரை இருக்கிறார்.

சூளைமேடு அலுவலகத்தில் ஒரு முறை அரசியல் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது, ஐம்பது தோழர்கள் வகுப்பைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வகுப்பு நடைபெற்று ஒரு மணிநேரம் ஆன நிலையில் உங்கள் அழைப்பு வருகிறது, எனக்குப் பழங்களை வாங்கித் தந்து விட்டுப் போகுமாறு கேட்கிறீர்கள். வகுப்பு நட்த்திக் கொண்டிருக்கிறேன் இதோ கொஞ்ச நேரத்தில் வாங்கி வருகிறேன் என்று சொல்வதை நாங்கள் கேட்கிறோம். மீண்டும் மீண்டும் எங்களிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் உங்களுக்கு அப்படியே விடை தருகிறார். ஒரு கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிற வகுப்பை அப்படியே நிறுத்தி விட்டு கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் என்று குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர்களிடம் சொல்லிச் செல்கிறார். அவசர அவசரமாக திரும்பி வந்தார். வகுப்பைத் தொடர்ந்தார். இது போன்ற நிறைய நிகழ்ச்சிகளை வெளியிலும், உங்கள் வீட்டிற்கு வந்திருந்த போதும் கண்ட தோழர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு முறை நீங்களே அப்பாவிடம் சொன்னதை நான் அறிவேன். நீங்கள் என் அடிமை. உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையெல்லாம் கிடையாது என்று. இந்தப் பெண்ணியத்திற்கு பெரியாரியம் உறுதியாக அடிகோலவில்லை.

பெரியாரின் பெண் விடுதலை என்பது ஆண் பெண் சமத்துவம் என்றுதான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆண் ஆதிக்கமும் இல்லை பெண் ஆதிக்கமும் இல்லை. உங்கள் முன்னால் கணவரோடு நீங்கள் மனமுறிவு பெற்றதும் நீங்கள் மறுமணம் புரிந்ததும் உங்களின் உரிமை. அதேபோல் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணோடு முற்றிய முரண்பாடுகளின் காரணமாகவும் அதைச் சரி செய்ய முடியாத போதும் மணமுறிவுக்கு முடிவு செய்வதையும், அதன் அடிப்படையில் அவர் அந்த உறவை முறித்துக் கொள்வதையும் ஏற்றுக் கொள்வதுதான் பெண்ணியத்தை முழுமைப்படுத்தும்.

என்னது மட்டும்தான் உரிமை ஒரு ஆணுக்கு அந்த உரிமை இல்லை என்பது பெண்ணியம் ஆகாது. என் அப்பாவைப் பொறுத்தவரை என் அம்மாவை விட்டு அவர் பிரிந்து வந்து உங்களை மணம் முடிக்க உரிமையுண்டு, அதில் பிழையேதும் இல்லை என்று கருதிய நீங்கள், உங்களிடமிருந்து மணமுறிவு பெற்று அவரின் மூத்த மகளிடம் வந்து சேர்வதற்கு மட்டும் உரிமை இல்லை எனக் கருதுவதில் என்ன நியாயம் இருக்கிறது. நான் என்ன செய்திருந்தாலும் எப்படி நடந்து கொண்டாலும் எவ்வளவு முரண்பாடுகள் முற்றினாலும் வாழ்வு குறித்த மதிப்பீடுகளில் வேற்றுமை எவ்வளவு கூர்மையடைந்தாலும் என்னோடுதான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுவது பெண்ணியமல்ல. அப்படிக் கருதுவது சர்வாதிகாரம் ஆகுமே தவிர பெண்ணியமாகாது. பெண்ணியம் பற்றி நான் உங்களுக்கு எடுத்துரைப்பது காலம் நிகழ்த்துகிற விந்தைதான்.

2012 வாக்கில் அப்பாவோடு நான் நீண்ட நாட்களாகத் தொடர்பு கொள்ள  முடியவில்லை. எனக்கு நடந்து கொண்டிருக்கிற பிரச்சனை தெரியும் என்பதால் அப்பாவைப் பார்த்தாக வேண்டும் என்ற வேகம் பெற்றேன். தயங்காமல் உங்கள் வீட்டுப் படியில் அப்போது ஏறினேன். உங்கள் அம்மா இருந்தார். நான் யார் எனத் தெரியாததால் நீ யார் என மிரட்சியோடு கேட்டார். நான் அப்பா அப்பா எனக் குரல் உயர்த்திச் சொல்ல அப்பா ஓடி வந்தார். என்னை வெளியே அழைத்து வந்து அலைபேசி தாமரையிடம் உள்ளது, இப்போது என்னால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். விரைவில் எல்லாவற்றையும் சரி செய்வேன். நீ தைரியமாகப் போ எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.  

அதே காலகட்ட்த்தில் ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ஒருவரை தோழர் ஸ்ரீராம் அப்பாவைப் பார்க்க உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்லாமலேயே அழைத்து வந்தார். அப்படி வந்த தோழர் ஸ்ரீராம் ஒரு தாளில் ஐயா உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று எழுதி அப்பாவுக்கு கொடுத்த புத்தகத்திற்குள் மறைத்து வைத்துக் கொடுத்துப் போனார். தோழர் அப்படிச் செய்ததற்குக் காரணம்: தொடர்ந்து அப்பா எந்த நிகழ்வுகளுக்கும் வெளியில் வருவதில்லை, அவரிடம் தொடர்பு கொண்டு பேச முடிவதில்லை அப்படி அப்பாவின் அலைபேசி கிடைத்தாலும் நீங்களே அதனை எடுக்கிறீர்கள் நீங்களே பதில் சொல்லி வைத்து விடுகிறீர்கள். தொடர்ந்து இப்படியே நடந்து வந்ததால் தோழர் சூழலைப் புரிந்து கொண்டு அப்படிச் செய்து போனார்.

2012 இல் அப்பா அந்தப் பெண்ணுடன் ஓடிப் போனதாக சொல்கிறீர்கள். அப்பாவுடைய அலைபேசியை கூட நீங்கள் உங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்கிறீர்கள், அவருக்கு வருகிற அழைப்பை, அவரை எடுக்க விடாமல் வைத்துக் கொள்கிறீர்கள் எடுத்தாலும் நீங்களே ஒரு பதிலைச் சொல்லி துண்டித்துவிடுகிறீர்கள், அவரை நீங்கள் வெளியே விடாமலும் வைத்துக் கொண்டிருந்தீர்கள், இன்னும் இன்னும் அந்த வீட்டுச் சிறையில் என்னென்ன நடந்தது என்பதை விசாரணை என்று வந்தால் கேள்விகளைப் பொறுத்து அப்பா சொல்லுவார் எனக் கருதுகிறேன்.
இதற்குப் பிறகு 2013 இல் காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவதூறுகளையும் பரப்பினீர்கள். 2012 இல் இருந்து கருத்து வேறுபாடு முற்றி அவர் மீது நீங்கள் ஒரு பழி சுமத்தி அதன் தொடர்ச்சியாக அவரது அரசியல் செயல்பாடுகளை மேற்சொன்ன வகைகளிலெல்லாம் முடக்கி காமன்வெல்த் போராட்ட்த்தில் அவரது நேர்மையையும் இழிவு செய்து அதன் பின்னும் அவர் உங்களோடுதான் வாழ வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள். இத்தனை முரண்பாடுகள் இருக்கிற போது அது முற்றுகிற போது அவர் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறார். இதில் என்ன தவறிருக்க முடியும்.

அதையும் மீறி அவர் உங்களுடனே இருந்திருந்தால் அது அவருக்கு என்ன வாழ்வாக இருந்திருக்கும். அலைபேசியை உங்களிடம் கொடுத்துவிட்டு, யாரோடும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், பொதுக் கூட்டங்களில் உரையாற்றாமல், போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதென்றால் மாணவப் பருவத்திலிருந்தே அரசியலே வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவை பொறுத்தவரை அது தற்கொலைக்குச் சமமில்லையா? இந்த நிலையில் இதோடு கூடுதலாக நீங்கள் அவரை ஏமாற்றி ஒரு துரோகம் இழைத்தீர்கள். அது குறித்து தேவைப்படும் போது பேசலாம். அதற்கு அப்பா உரிய விளக்கம் கேட்டும் நீங்கள் எந்த நேர்மையும் இல்லாமல் தொடர்ச்சியாகத் தவிர்த்தீர்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் 2014 இல் அவர் வெளியேறினார், என் வீடு வந்து சேர்ந்தார்.

இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி பேசுகிறீர்கள். அன்று இயக்கத்தின் மூத்த தோழர்களை உங்கள் இல்லத்திற்கு வரவழைத்து அப்பாவையும் அருகில் வைத்து அவர் மீதான குற்றங்களை நிறுவுகிறேன் பாருங்கள் என்று ஒரு ஏற்பாட்டைச் செய்தீர்கள். அப்பாவை ஏதோ வாங்கி வர வெளியே அனுப்பிவிட்டு அந்த இடைவெளியில் மூத்த தோழர்களை வீட்டிற்கு வரவழைத்து பேசியதன் காரணத்தை விளக்குவீர்களா? அப்பாவின் முன்னிலையிலேயே அப்பாவின் குற்றங்களை நிரூபிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் வந்தது. நீங்கள் குற்றம் சுமத்துபவர். அப்பா குற்றத்திற்கு ஆளானவர்.

இது குறித்து முடிவு செய்ய அல்லது தெரிந்து கொள்ள ஒரு குழு வருகிறது.  அந்தக் குழுவின் முன்னால் இரு தரப்பும் அமர்ந்திருந்து அவரவர் வாதங்களை முன் வைத்தால்தானே உண்மையைக் கண்டெடுக்க முடியும். ஒரு தரப்பையே அந்த இடத்தில் இல்லாமல் செய்து விட்டு நீங்கள் என்ன பேசியிருந்தாலும் என்ன முன்வைத்தாலும் அது பொய்மைக்கும் நடிப்புக்கும் கிடைத்த தற்காலிக வெற்றியாக மட்டுமே இருக்க முடியும். குற்றம் சாட்டப்படுபவரின் மறுப்பை அல்லது கருத்தை அன்றும் நீங்கள் பேச இடம் தரவில்லை, இன்றும் விசாரணை குழுவை முடக்கி விட எந்த முனைப்பையும் காட்டாமல், அதாவது அவர் கருத்துக்கும் மறுப்புக்கும் இடம் கொடுக்காமல் இன்று வரை சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மூத்த தோழர்களை பொறுத்த வரை இன்றும் நான் மதிக்கிற உறவுகள்தான். ஆனால் அப்பா தரப்பை ஒருமுறையேனும் கேட்காது எடுத்த முடிவு குறித்து இன்று வரை எனக்கு வருத்தம் உண்டு.

காமன்வெல்த் உண்ணாநிலைப் போராட்டம் பற்றி குறிப்பிடுகிறீர்கள். காமன்வெல்த் போராட்டத்தின் பின்புலம் என்ன? எந்தப் பின்புலத்தில் அந்தப் போராட்டம் கருக்கொண்டது? இனப் படுகொலை நீதிக்காக சிங்கள அரசைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த ”இலங்கையை புறக்கணிப்போம்” என்ற இயக்கம் பற்றி பரவியிருந்தது. ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டதற்கு நீதி வேண்டும். அதற்கு இந்திய அரசு இலங்கை அரசுடனான அரசுறவு பொருளியல் பண்பாடு கலை விளையாட்டு என அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும். துண்டிக்கச் செய்யும் கடமை தமிழக மக்களைச் சார்ந்திருந்தது. அப்படிச் செய்வதுதான் இலங்கையைச் சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான தொடக்கமாக அமையும். எட்டுக்  கோடித் தமிழக மக்களைக் கொண்ட இந்திய அரசை நெருக்கி மக்கள் போராட்டங்களின்  மூலம்  இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவை

அயன்மைப்படுத்துவதுதான் அதன் முதற்புள்ளி.  இதை செய்வதற்குரிய முதன்மை முழக்கமான இலங்கையை புறக்கணிப்போம் - இயக்கம் தொய்வைச் சந்தித்திருந்த காலம். காமன்வெல்த் மாநாடு இனப்படுகொலை இலங்கையில் நடைபெறுகிற செய்தி வருகிறது. இலங்கை அரசு செய்த இனக்கொலைக் குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்காகவும் அதன் மீது படிந்த குருதிக் கரையின் மீது வெள்ளை அடிப்பதற்காகவும் அந்த காமன்வெல்த் மாநாட்டைத் தன்னுடைய நாட்டில் நடத்த இருந்தது இலங்கை அரசு. இலங்கையை புறக்கணிப்போம் இயக்கத்திற்கு உயிர் தந்தாக வேண்டிய கட்டாயம் இதன் மூலம் வந்தது. இந்தப் பின்னணியில் இலங்கையில் நடக்க இருக்கிற காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியத் தலைமை அமைச்சரை போகவிடக் கூடாது. அப்படிப் போக விட்டுவிட்டால் இலங்கையை புறக்கணிப்போம் இயக்கம் உயிரிழந்து போகக் கூடும். அது இனக்கொலைக்கான நீதிப் போராட்டத்தில் பெரும் பின்னடைவாகும். இந்த நோக்கத்திற்காகவே காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியத் தலைமை அமைச்சர் போகக் கூடாது என்ற கோரிக்கையை முதன்மையாக வைத்து காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

அப்பாவின் உண்ணாநிலை போராட்டம் அன்றைய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை காமன்வெல்த் மாநாட்டிற்குப் போகவிடாமல் தடுத்தது. கலைஞரின் வாயிலாக திரு. மன்மோகன் சிங் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே முடிவெடுப்பேன் என உறுதி கொடுத்தார். அதன்படி அவர் போகவும் இல்லை. இது அப்பாவின் வெற்றியல்ல தமிழ் மக்களின் வெற்றி. தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்த உண்ணா நிலை போராட்டத்தை நாடகம் என்று சொல்வதும் உள்நோக்கம் கற்பிப்பதும், தமிழ் மக்களை அவமதிப்பதாகும். உலகத் தமிழர்களையே கேலி பேசுவதாகும்.

வெற்றி அல்லது வீரச்சாவு” என்று தலைப்பிட்டு அப்பா போராட்டத்தில் அமர்ந்தார். தோழர் மதியவன் தலைமையில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அது களத்திலிருந்து செயல்பட்டது. அப்பா உண்ணாநோன்பு இருந்து கொண்டிருந்த நாட்களில் நீங்கள் ஒரு நாள் கூட எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் அப்பாவை அலைபேசியில் அழைத்து வீட்டு வாடகையை கொண்டு போய் யார் கொடுப்பது என்று கேட்டீர்கள்? நான் பக்கத்தில்தான் இருந்தேன். அப்பா ஒரு தோழரை அழைத்து அவரை அனுப்பி அந்த நிலையிலும்  வாடகை கொடுத்து வரச் செய்தார். அப்பா நாட்கள் செல்லச் செல்ல எலும்பும் தோலுமாய் உருகிப் போனார். கடைசி சில நாட்கள்தான் சுபவீ மாமா அங்கு வந்தார். அப்பாவின் உடல்நிலை கண்டு சுபவீ மாமா கண் கலங்கி நின்ற காட்சி என் கண்முன்னே நிற்கிறது. இருவருக்கும் என்ன விவாதம் நடைபெற்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள்தான்.

ஆனால் நீங்கள் போராட்டத்தை மதிக்கவும் இல்லை போராட்ட இடத்திற்கு ஒரு நாள் கூட வரவுமில்லை. இரவு பகலாக அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவர்கள் தோழர்கள்தான், அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்று தவித்தவர்களும் தோழர்கள் தான். உண்ணாநிலை போராட்டம் வெற்றிகரமாக ராஜீவ்காந்தி பொது மருத்துவனையில் முடிகின்ற நாளில் அதற்கான செய்தியாளர் சந்திப்பில் திடீரென வந்து நின்றீர்கள். நானும் பேட்டி கொடுக்க வேண்டும் என்று முண்டி அடித்து வம்பு செய்தீர்கள். அப்போது அண்ணன் திருமாவளவன் இருந்தார். பெ.மணியரசன் மாமாதான் தியாகுவை தவிர யாருக்கும் இங்கு பேச அனுமதியில்லை என குரலுயர்த்திச் சொன்னார். போராட்ட்த்தின் மீது துளி மரியாதையும் இல்லாத நீங்கள் போராட்ட்த்தில் அவருடைய நேர்மையை கொச்சைப்படுத்தி வந்த நீங்கள் போராட்ட வெற்றியில் வந்து பங்கு கொள்ள முனைகிறீர்கள் என்றால் உங்களிடம் அறம் இல்லை நேர்மை இல்லை உண்மையும் இல்லை என்பதையே அது காட்டுகிறது.

மீண்டும் சொல்கிறேன் அப்பா ஒரு கருவிதான், அது தமிழ் மக்களின் போராட்டம், மாணவர்களின் போராட்டம். இலங்கையை புறக்கணிப்போம் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த போராட்டம். இந்த போராட்ட்த்தை இப்போதும் நீங்கள் கொச்சைப்படுத்துவது உங்கள் வன்மத்தையே காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பொய்யும் புரட்டும் ஒரு செய்தியில் பல்லிளிக்கின்றன. எந்த உண்மையும் நேர்மையும் அற்ற வன்மங்களின் மொத்த உருவமாக வெளிப்பட்டுவிட்டீர்கள். அது மோகன்ராசு மாமாவின் படுகொலை. அன்று உங்களின் தனிப்பட்ட முயற்சியினாலும், முழுமுனைப்பினாலும் இயக்கத்தை பிளவுபடுத்தினீர்கள்.
மோகன்ராசு மாமா உள்ளிட்ட தோழர்கள் அப்பாவை இயக்கத்தை விட்டு நீக்கியதாக அறிக்கை தந்தார்கள், அதன்பின் பொதுச் செயலாளராகவே அப்பா தொடர்வதைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார்கள். இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக அன்று அப்பா தலைமையில் அப்பாவின் தலைமையை எற்றுக் கொண்ட தோழர்கள் ஒன்று கூடி அதற்கு எதிர்வினையாற்றினார்கள். இயக்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டார்கள்.

குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் அப்பாவைப் பொதுச் செயலாளர் என்று பெயரிட்டு அழைத்தவர்கள் அந்தத் தோழர்களையும் அழைத்திருக்கிறோம், அந்தத் தோழர்களும் தங்களைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் என்றும், மோகன்ராசு தோழரை பொதுச் செயலாளர் என்று அடையாளப்படுத்தச் சொல்கிறார்கள் என்ன செய்வது என்று அப்பாவைக் கேட்டார்கள், அப்பா சொன்னார் அதே அடையாளங்களோடு மோகன்ராசு தோழர் வருவது குறித்து எனக்கு எந்தத் தடையும் இல்லை. அப்படியே வரட்டும். அவரையும் பொதுச் செயலாளர் என்றே அடையாளப்படுத்துங்கள் என்று சொன்னார். இப்படித்தான் அவற்றுக்கு எதிர் வினையாற்றி இருக்கிறார். இன்னும் இது பற்றி சொன்னால் அது விரிந்து போகும்.  மோகன்ராசு மாமா இருக்கிற போதே அவர்கள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் எனப் பெயரிடும் பணி தொடங்கிவிட்ட்து என்பது கூடுதல் செய்தி.  .

நீங்கள் இந்த அறிக்கை வந்த 4 மாதங்களில் மோகன்ராசு மாமா கொல்லப்பட்டார் என்று பதிவிட்டுள்ளீர்கள். உங்கள் பதிவுக்கு கீழே உள்ள இடுகையில் “4 மாதங்களில் தோழர் மோகன்ராசு கொல்லப்பட்டார் என்பது கூடுதல் செய்தி!... இதையெல்லாம் மன்னிக்கவே இயலாது” என்று காயத்ரி என்பவர் குறிப்பிடுகிறார். அதற்கு நீங்கள் தருகிற பதிலில் “காயத்ரி, பட்டப்பகலில் அவரது நூலக அறையில் வைத்துக் கொல்லப்பட்டார் என்று சொல்லிவிட்டு, இந்தக் கொலைக்கு காரணம் வேறு என்று நிறுவப்பட்டது. ஆனால் எங்கள் அனைவருக்கும் உள்ளூர தெரியும் என்ன நடந்திருக்கும் என்று.

தனியார் விசாரணை ஏற்பாடு செய்யலாம் என்றால், உள்ளூர் தோழர்கள் மறுத்துவிட்டார்கள் என்பது வியப்பிலும் வியப்பு. இப்போதும் உள்ளூர் தோழர்களை கேட்டால் சொல்வார்கள்” என்று பதிலளித்துள்ளீர்கள்.
கொலை ஏன் நடந்த்து என்று நிறுவப்பட்ட உண்மையை விரித்து நான் இங்கு சொல்லப் போவதில்லை. கொல்லப்பட்டது என் மாமா. ஆனால் உங்களைத் தவிர மோகன்ராசு மாமாவின் குடும்பத்தில் ஒருவரோ, மாமாவோடு ஒன்றுகலந்து நின்றவர்களில் ஒருவரோ, இப்படி ஒரு நாளும் சொன்னதில்லை. இன்றைக்கும் மோகன்ராசு மாமாவோடு எல்லாமுமாக இருந்த தோழர்கள் அப்பாவோடு இன்றும் அதே மதிப்போடும் அன்போடும் தொடர்பில் இருக்கிறார்கள்.

மோகன்ராசு மாமாவின் இறுதி நிகழ்விற்கு தொடர்வண்டியில் முன்பதிவு செய்ய முடியாமல் கழிவறை அருகில் அமர்ந்தேதான் அப்பா ஈரோடு சென்றார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அவருடன்தான் பயணப்பட்டேன். எம்.ஆர்.எஃப் சேகர் தோழரும் பாரதியும் உடன் வந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் அப்பாவைப் பார்த்த மாத்திரத்தில் மோகன்ராசு மாமாவுடன் எப்போதும் உடன் இருக்கும் தோழர்கள் அய்யா… !!! என கதறி ஓடி வந்து அணைத்து அழுத காட்சியை நான் பார்த்துக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தேன்.

அங்கே உடற்கூறாய்வு பணிகளுக்காக மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் கலங்கிய இதயத்தோடும் கொன்றவர்கள் தப்பித்து விடக் கூடாது என்ற உறுதியோடும் நின்று கொண்டிருந்தார். தோழர் ப.பா.மோகன் தன் ஆற்றல் முழுவதையும் திரட்டி வழக்கை திறம்பட நடத்திக் கொன்றவர்கள் மீதான கொலைக் குற்றத்தை நிறுவிக் காட்டினார். குற்றவாளிகள் இவர்கள் என நிறுவுவதென்றால் குற்றத்திற்கான காரணமும் நீதிமன்றத்தில் நிறுவப்பட்டதென்று பொருள். நீதிமன்றத் தீர்ப்பையும் அனுப்பச் சொல்லிக் கேட்டுள்ளேன். இந்த வழக்கை நடத்திய காவல்துறையையும் அந்த வழக்கை உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடத்தி வென்ற ப.பா.மோகன் அவர்களையும் நீங்கள் அவமதிக்கிறீர்கள்.  .

என் அப்பா மீது நீங்கள் புனைகிற குற்றசாட்டுகளை இனியும் அனுமதிக்க முடியாது. அதை நீதிமன்றம் கொண்டு செல்ல யாரும் உங்களைத் தடுக்கவும் இல்லை. நீதிமன்றம் செல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் விசாரணைக் குழு செயல்படுவதற்கான வழிமுறைகளைக் காணுங்கள். இதில் எதுவானாலும் அதனை எதிர்கொள்ள அப்பா தயாராகவே இருக்கிறார், இருப்பார்.
இந்த முறையைத் தவிர்த்து நீங்கள் இனியும் இப்படிப்பட்ட பதிவுகளை இட்டால், என் அப்பாவின் உள்ளத் தூய்மையை நன்கு அறிந்தவள் உணர்ந்தவள்  என்ற முறையில் உங்களை நான் சளைக்காமல் எதிர்கொள்வேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக காமன்வெல்த்துக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதையும் அதன் மூலம் உலகத் தமிழர்களைச் சிறுமைப்படுத்துவதையும்… மோகன்ராசு மாமாவின் கொலைக்கு வன்மத்தோடு கற்பனையாக கற்பிக்கும் உங்கள் உள்நோக்கத்தையும் அதன் மூலம் நீங்கள் செய்யும் அவதூரையும், ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதற்கு நீங்கள் பொதுவெளியிலும் மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லும் கட்டாயத்தை நான் ஏற்படுத்தத் துணிவேன். மீண்டும் சந்திப்போம்.
சுதா காந்தி தி.

கருத்துகள் இல்லை: