வியாழன், 24 ஜூன், 2021

காவலர் தாக்கி உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  சேலத்தில் காவலர் தாக்கி உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று (22/06/2021) இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் அவர்களைத் தணிக்கை செய்துள்ளனர்.


அப்போது காவல்துறையினருக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் என்பவர் மயக்கமடைந்து சாலையில் விழுந்த நிலையில், அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, பின்னர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இன்று (23/06/2021) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்ற போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர் முருகேசன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.  இத்துயரச் செய்தியை அறிந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், அன்னாரின் குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: