செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா?

மின்னம்பலம் : நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கான வழிவகைகளில் ஒன்றாக, தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரிக்க தங்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. 

இந்த வழக்கின் அடிப்படையில், தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்த கூட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்' என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட கனிமொழி, "உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். 

அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது. அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் - ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும் - ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும் இயக்கி - மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர - ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல"என்று பேசினார்.

அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி என்று திமுக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாகிறதோ என்ற விமர்சனங்களும், கருத்துகளும் இதை ஒட்டி எழுந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

"ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.

தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: