திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி ! மருத்துவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு

tamil.indianexpress.com :தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி,
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில்
ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முகக் கவசத்தை   கண்டிப்பாக அணிய வேண்டும் என்றார்.
தமிழக மக்களுடைய நலன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய நலன் கருதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு அவர்களை நான்   அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன்.
என்னுடன் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சக்திவேல் உள்ளிட்ட நண்பர்களும் கலந்து  கொண்டார்கள்.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல்
நடைபெற்றது.
தேர்தல்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உலகத்தில்    எல்லா நாடுகளிலும் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது. 

ஜனநாயக   நாடுகளில் தான் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை இருக்கின்றது.
அந்த வாக்குரிமை மூலமாக மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்கும்,  நாடாளு மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த பிரதிநிதிகள்  தான் மக்களை ஆட்சி செய்வார்கள். அவர்கள் மூலமாகத்தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்கின்றன. எனவே அந்த வகையில் வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு, 5 ஆண்டு காலத்துக்கு ஒரு முறை தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். எனவே அந்த வாக்குரிமை என்பது ரகசியமாக நடைபெற வேண்டும். எந்த விதமான ஆசை வார்த்தைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் இருந்திட வேண்டும் என்று தான் ரகசிய வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.  

தமிழ்நாட்டில் இதுநாள் வரையிலும் தேர்தல்களில் இலை மறை காயாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் அல்லது பணம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெரிய அளவு பணப்பட்டுவாடா நடந்தது.

ஆனால் 234  தொகுதிகளிலும் இந்த முறை எந்தவிதமான கூச்சமோ, அச்சமோ இல்லாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் முன்பாக கவுண்டர்கள் அமைத்து   பட்டவர்த்தனமாக, 500 ரூபாய் முதல் 5000ரூபாய் வரையிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு,  வாக்குகள் ஒவ்வொன்றும் விலைக்கு வாங்கப்பட்டு இருக்கின்றன. இது ஒரு ஜனநாயகத்துக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தான போக்காகும்.

எனவே, இப்பொழுது நடைபெற்றிருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகபூர்வமாகவோ சுதந்திரமாகவோ நடைபெற்ற தேர்தல் அல்ல. இது ஊழல் படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் ஆகும். எனவே இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தேர்தல் ஆணையத்திற்கு இது போன்று நடக்கக்கூடிய ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கு உண்டான எல்லா விதமான அதிகாரகங்களும் இருக்கிறது. எனவே வரக்கூடிய மே மாதம் 2ஆம் தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை நடைபெறாமல், நிறுத்தி வைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் தலைமையில் தமிழ்நாட்டில்  234 தொகுதிகளிலும் முறையாக ஆய்வு செய்து,  எந்தெந்த வேட்பாளர்கள் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கி பணத்தையும் அந்த வேட்பாளர் உடைய செலவு கணக்கில் சேர்த்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல இந்த தேர்தலை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது ஆறு மாத காலத்திற்கோ அல்லது ஒரு வருட காலத்திற்கோ எல்லாம் சரியாகும் வரையிலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை, தமிழகத்திலே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: