திங்கள், 14 செப்டம்பர், 2020

நீட் தற்கொலைக்கு நிவாரணம் தருவதா? – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

BBC : நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின்

குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதும், அரசு வேலை கொடுப்பதும் தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. நீட் விவகாரத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கோரி வழக்கறிஞர் சூரியபிராகாசம் தொடர்ந்த வழக்கில், தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஊடகங்கள் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தற்கொலையை மகிமைப்படுத்துவது போலாகிறது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்கள் இத்துடன் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை சுட்டிக்காட்டி, நீட் தேர்வு குறித்த தெளிவை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு போதிய உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் 2018ல் வழக்கறிஞர் சூரியபிரசாகம் வழக்கு தொடுத்திருந்தார்.

''வழக்கு விசாரணையில், மனநல ஆலோசனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு கூறியது. ஆனால் இன்று வரை மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த 10 நாட்களில் மூன்று மாணவர்களை தமிழகம் இழுந்துள்ளது. மாணவர்களின் இறப்பை தடுப்பதற்கு பதிலாக , தற்கொலைகளை ஊக்குவிப்பது போல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நிதி அளிக்கிறார்கள், அரசாங்கம் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என கூறுவது மேலும் தற்கொலை எண்ணத்தை ஊக்குவிக்கும் என மீண்டும் மனு கொடுத்தேன்,''என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், '' இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதனால் தான் 2018-ல் தொடர்ந்த வழக்கு முற்று பெற்றது. தற்போதுவரை மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசு சொன்னது போல மனநல ஆலோசனை மையங்கள் அமையவில்லை என மனு கொடுத்தேன். என் மனுவை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி தமிழக அரசக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர அனுமதி அளித்துள்ளனர்,''என்கிறார் சூரியபிரகாசம்.

கருத்துகள் இல்லை: