வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஒன்றரை லட்சத்துக்கு 8 லட்ச ரூபாய் கந்து வட்டி!-தலைமறைவான சிவகாசி வங்கி ஊழியரின் மோசடி நெட்வொர்க்!

nakkheeran.in  : சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில், கந்துவட்டி கொலை மிரட்டல் வழக்கொன்று பதிவாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு – வட்டியோ வட்டி! வட்டி போடும் குட்டி! சிவகாசியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உணவுப் பொருள் நிறுவனம் ஒன்றின் விநியோகஸ்தராக இருந்து, கடைகளுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். சிவகாசி ஈக்விடாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள அவரிடம், அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்த விளாம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ‘அவசரத் தேவைக்கு நான் பணம் தருகிறேன்’ என்று அறிமுகமாகி, 2019, பிப்ரவரி மாதம், வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார். ரூ.50,000 கடன் தொகைக்கு, முதலிலேயே ரூ.13,000 பிடித்துக்கொண்டு ரூ37,000 கொடுத்துள்ளார். அந்தத் தொகையை வாரம் ரூ.5,000 வீதம் 10 வாரங்களில் ரூ.50,000-ஆக, தினேஷ் கொடுத்துள்ளார். இன்னொரு விதமாக பாலமுருகன், ரூ.50,000-க்கு, ரூ.5,000 பிடித்துக்கொண்டு, முதலில் ரூ.45,000 கடன் கொடுத்திருக்கிறார். இதில் அசலையும் சேர்த்துத்தர வேண்டியதில்லை. ஆனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, வட்டியாக ரூ.5,000 தந்துவிட வேண்டும். அப்படி வட்டி கொடுக்காதபோது, ரூ.5,000 வட்டிக்கு அபராதமாக நாளொன்றுக்கு ரூ500 கொடுத்துவிட வேண்டும்.

தினேஷை உணவுப் பொருள் விநியோகஸ்தர் ஆக்கிய நிறுவனத்தின் கடுமையான நெருக்கடியால், தொடர்ந்து பாலமுருகனிடம் ரூ.1,42,000 வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார். வட்டி கட்ட முடியாமல் அபராதமும் அடிக்கடி செலுத்தி வந்திருக்கிறார். இந்த அளவுக்கு வட்டி கட்டி தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், அந்த உணவுப் பொருள் நிறுவனம், சப்ளையை முற்றிலுமாக நிறுத்திவிட, நஷ்டம் ஏற்பட்டு, தொழில் என்பதே இல்லாத நிலைக்கு தினேஷ் தள்ளப்பட்டுள்ளார். அதனால், பாலமுருகனுக்கு  வட்டியோ, அசலோ அவர் கொடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை: