செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மக்களின் கைத்தட்டலில் மிரண்டு போன பிரபாகரன் .. சுதுமலை கூட்டம்.. 1987

 Sugan Paris : யாழ்ப்பாணத்தில் இரண்டு அரசியல் ஆளுமைகள் மக்கள் மனங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்கள்.
1) இந்திராகாந்தி
2) சந்திரிக்கா குமாரதுங்க
இந்தியா உதவிக்கரம் தந்தபோது வயதானவர்கள் கண்ணீர் சொரிந்து கையெடுத்து வணங்கி வரவேற்றபோது அவர்கள் ராஜீவ் காந்திக்காக உச்சரித்த பெயர் "அன்னை இந்திராகாந்தியின் புதல்வனே ! "
சமாதானத்தினதும் அரசியற்தீர்வு முயற்சிகளினதும் துணிச்சலான நடவடிக்கைகளிலும் மக்கள் நம்பிக்கை வைத்த சந்திரிக்கா அம்மையாரை மக்கள் அழைத்தது" சமாதானத்தின் தேவதையே !'
இரண்டும் மக்களின் சமாதானத்தின்மீதான பெரு வேட்கையைக் காட்டிநின்றன.
இரண்டிலும் அரண்டுபோன புலிகள் தொடர்ந்த யுத்தமே அவர்களை சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்தது.
சுதுமலையில் "இந்தியாவை நம்பி நமது ஆயுதங்களை ஒப்படைக்கிறோம் !" என பிரபாகரன் சொன்னபோது மக்கள் எழுப்பிய கரகோசம் கண்டு பிரபாகரன் மிரண்டது நடந்தது.        அமைதிப்படை யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் பரசூட் தரையிறங்கும்போது சர்வதேச விதிகளுக்கு மாறாக அவர்களைச் சுட்டது தொடங்கி தொட்டது சனியன்.
இத்தகைய சமாதான வேட்கையை திருகி போரை நோக்கித் திசை திருப்ப வஞ்சகப்போராளி திலீபன் தன் உயிரைப் பணயம் வைத்து ஆடிய ஆட்டமே சாகும்வரை உண்ணாவிரதம்.
நீ முன்னால் போ ! நான் பின்னால் வருகிறேன் என தலைவன் சொன்ன சொல் காப்பாற்றாது அப்படியே போய் "நல்ல சமையல்காரன் தான் நல்ல போராளியாகமுடியும் ! "என்று அடுப்புக்கரியை எல்லோர் முகத்திலும் பூசிக்கொண்டார்.
ஆக பின்னர் நிகழ்ந்த பேரழிவிற்கெல்லாம் கால் போட்டது திலீபனின் உண்ணா நோன்பே !
அரசு தனது நோக்கில் திலீபனின் நினைவைக் கொண்டாடுவதை தடைசெய்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இதைத் தொடுத்து புலிகள் சிந்தனை ஒழுங்கமைவு மீளவும்
வளரவிடுவதில் அரசின் எச்சரிக்கையும் அதையொட்டிய தடையும் நமக்கு ஆதாயமானதே ! இறுதிப்போரில் இறந்தவர்களுக்கான
முள்ளிவாய்க்கால் முற்றத்தையும் நினைவேந்தல்களையும் அரசு அங்கீகரித்திருப்பது ஒரு புத்திசாலித்தனம் என்றே சொல்லவேண்டும்.
ஆனால் இந்த கிட்டு பூங்கா ,திலீபன் நினைவு நாள் இவற்றை அரசு அறவே துடைத்தழிக்கவேண்டும்.
சமாதானத்தின் பகைவர்கள் இவர்கள்.
புதிய தலைமுறை புலிகளின் இத்தகைய கடந்தகால ஏமாற்றுத் தந்திரங்களை அறிந்திராதவர்கள்

 

எவர்கிங் ஏகாம்பரம்  : இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தமிழர்களை கொன்றது என்பவர்கள் விளங்கி கொள்ள....

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது.

ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது

ஏதோ அமைதிபடை என்பது அன்று தான் புதிதாக சென்றது அல்ல, 1987க்கு முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர்

அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய நிலையில்தான் ஐநா அனுமதியுமின்றி ராஜிவ்காந்தி உணவு வீசி, புலிகளால் தமிழரை காக்கமுடியாது என்ற நிலை வந்தபின்பே அமைதிபடை அனுப்பபட்டது

ஈழ தமிழ்மாநில அரசின் பாதுகாவலாக அது நிற்கும் என்றே அனுப்பபட்டது

அமைதிபடை அங்கு சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, ( ஒப்பந்தமே அது தான் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது ) புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் "இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என பிரபாகரன் சொன்னவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது,

ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது, அந்த வீடியோ இப்பொழுதும் உண்டு, ஆயுதங்களை ஒப்படைகின்றோம் என பிரபாகரன் சொன்னதும் கூட்டம் ஆர்பரித்த தருணம் அவன் முகம் சட்டென சில நொடி இருளும்.

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல் திருப்பபட்டது.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை,

புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிப்பது?

சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 30 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி.

இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 ஈழ புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

மோடி கொழும்பு செல்லும்பொழுதெல்லாம் அதை வணங்குவார்

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

"சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று,

அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி இந்திய அமைதிபடை அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது"

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

அமைதிபடை சென்றபொழுது ராஜிவ்காந்தியுடன் கை கொடுத்து நின்றது ராமசந்திரன் அருகில் ஜெயலலிதா..

அமைதிபடையின் சர்ச்சை காலத்தில் அமைதிபடை திரும்ப வரவேண்டும் என குரல் வர, அதை மறுத்தவர் ஜெயலலிதா, இந்திய ராணுவம் அங்கு நிற்பதுதான் நாட்டுக்கும் ஈழமக்களுக்கும் நல்லது என தெளிவாக சொன்னார்...

விபிசிங் ஆட்சியில் கலைஞரே அமைதிபடையினை மீண்டு வர செய்தார், அன்று பிரபாகரனை 3 நாளில் கொல்லும் அளவு அது மணலாற்றில் வளைத்திருந்தது..

அமைதிபடை திரும்பியபொழுது வரவேற்கமாட்டேன் என முதலமைச்சராக இருந்த கலைஞர் சொன்னார், அவரின் தேசபற்று அப்படித்தான்..

வெளிநாட்டு புலிகளுக்காக இம்மாநில முதலமைச்சர் சொந்தநாட்டு ராணுவத்தை அப்படி அவமதிக்க கூடாது

ஆனால் என்னாயிற்று?

கால் நக முடிக்கு கூட கருணாநிதியினை மதிக்கா பிரபாகரன் சென்னையில் பத்மநாபாவினை கொல்ல கலைஞர் அரசு கவிழ்ந்தது..

அடுத்த 6 மாதத்தில் புலிகள் ராஜிவினை கொல்ல திமுக தடை செய்யும் அளவிற்கு சிக்கலானது நிலை..

1990 இதே தேதியில் 1500 வீரர்ர்களை இழந்து அதன் பின் ஒரு தலைவனையும் இழந்த இந்தியா 2009ல் அமைதி காத்து பழிவாங்கிற்று..

அந்த அமைதிபடை திருப்பி அனுப்பட்டபொழுது அதுசாகசம் என ஆர்பரித்த புலிகள், 2009ல் அது மாபெரும் தவறு என உணர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது..

கொழும்பில் இன்றும் அமைதிபடையாக சென்று உயிர்நீத்த 1500 வீரர்களுக்கு நினைவிடம் உண்டு, அதில் ஈழத்தில் செத்த நம் 1500 வீரர்களின் பெயர் பொறிக்கபட்டிருக்கும்..

அங்கு செல்லும் இந்திய அதிகாரிகள் எல்லாம் அஞ்சலி செலுத்துவார்கள்..

ஆனால் அவர்கள் பிணம் வந்த சென்னைக்கும், அவர்கள் கரையேறிய சென்னை கடற்கரையிலும் ஒரு நினைவு சின்னமும் இல்லை

கருத்துகள் இல்லை: