செவ்வாய், 15 செப்டம்பர், 2020

காணாமல் போன காசிமேடு மீனவர்கள் மீட்கப்பட்டனர்... மியான்மர் கடல்பகுதியில்..

Kasimedu FIshermen
Mageshbabu Jayaram - Samayam Tamil : காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் ஒருவாரம் கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தருமாறு போலீசாருக்கும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


இதற்கிடையில் ஜூலை 28ஆம் தேதி சம்பந்தப்பட்ட விசைப்படகில் இருந்த வாக்கிடாக்கி சிக்னல் கிடைத்ததாக வேறு படகைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


அதைக் கொண்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆறுதல் கூறினார். மீனவர்களை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


காசிமேடு மீனவர்கள் மாயமாகி 50 நாட்களைக் கடந்ததால் பதற்றம் அதிகரித்தது. இதுதொடர்பான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உருவாகிறது புயல், சென்னையில் மழை வெளுக்க போகுது எனத் தனியார் வானிலை கணிப்பு!

இதன்மூலம் மொத்தம் 20 கப்பல்களில் மீனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து வங்கதேசம், மியான்மர் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு காணாமல் போன மீனவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்பட்டது.

இந்நிலையில் 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் கடல்பகுதியில் 10 காசிமேடு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த செய்தி கிடைத்ததும் அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.


  

கருத்துகள் இல்லை: