ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

விஜயவாடா கொரோனா மையத்தில் தீவிபத்து... 7 பேர் உயிரிழப்பு

Vishnupriya R - tamil.oneindia.com : அமராவதி: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை முகாமில் தீவிபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.      நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை நிரம்பிவிட்டன. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் கொரோனா வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு ஹோட்டலில் கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டது. இந்த கொரோனா மையத்தில் 40 நோயாளிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் இருந்தனர்.          இந்த நிலையில் இந்த ஹோட்டலில் சற்று நேரத்திற்கு முன்பு தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடிகளில் இருந்து குதித்தும், தப்ப முயற்சித்தும் தீயில் கருகி 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என தெரிகிறது<

கருத்துகள் இல்லை: