சனி, 15 ஆகஸ்ட், 2020

அதிமுக எந்த சாதனை செய்த தைரியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது? சாவித்திரி கண்ணன்

சாவித்திரிண்ணன் : எந்த சாதனையை செய்த தைரியத்தில் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்? சுய அறிவும் கிடையாது..!
சொல்வதைப் புரிந்து கொள்ளும் திரானியும் இல்லை! இருவரும் சுய நலத்தின் உச்சம்! மக்கள் நலன் சார்ந்து யோசிக்காமால் தங்களுக்கு என்ன ஆதாயம் என்ற கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் அணுகுகிறார்கள்! கொரானா விவகாரம் ஒன்று போதுமே…உங்கள் கோமாளித் தனத்தைக் கண்டு நாடே சிரிக்கிறது..! அதிகாரவர்க்கம் இழுத்த இழுப்புக்கு ஓடுவதும், கிடைத்தவரை ஆதாயம் என எல்லா வழிகளிலும் சுருட்டுவதும் தான் நடக்கிறது! 2016 ஆண்டின் இறுதி தொடங்கி இன்று வரையில் தமிழகத்தில் காலியாகும் எல்லா மத்திய அரசு பணியிடங்களிலும் கிட்டதட்ட 90% வட மாநிலத்தவர் வந்து ஆக்கிரமித்து வருகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு கூட திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் அடி நிலை பணியாளர்களுக்கான 518 இடங்களுக்கு தமிழ் நாட்டில் அல்லாதார் 500 பேரை நியமித்துள்ளார்கள் என்றால், இவர்கள் இருவரையும் முகமாக வைத்துக் கொண்டு பாஜக நடத்தும் சித்துவிளையாட்டு தானே இது!

அவர்கள் நேரடியாக ஆட்சி செய்து தமிழகத்தில் இவ்வாறு நடந்தால் தமிழகமே கொந்தளித்து இருக்கும்!

# தமிழகத்தில் பொருளாதாரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில் நன்றாக இருக்கும் பல சாலைகளை பழுது பார்ப்பதாகவும், போக்குவரத்தே இல்லாத பொட்டல் பகுதிகளுக்கு ரோடு போடுவதாகவும் 12,000 கோடியை ஒதுக்குகிறார்கள்…என்றால்…எவ்வளவு பேராசை…! எவ்வளவு சுயநலம்!

# இந்த மாதிரி பலவீனமானவர்களை முன்னிறுத்தி கொள்ளையடித்து கொழுக்கவிட்டு, ஆதரிப்பது!

# சுற்றுச்சூழல் அழிவுக்கான மசோதா…

# எளியவர்களின் வாய்ப்பை மறுக்கும் நீட் தேர்வு,

# அறிவுக்கும்,மனிதத்திற்கும் எதிரான கல்விக் கொள்கையை திணிப்பது,

# தமிழக மக்களின் வேலைவாய்ப்பை முற்றிலும் அபகரிப்பது…,

# திராவிடம் குறித்த வெறுப்புணர்வை வளர்ப்பது

# சிறுபான்மையினர் குறித்த பாகுபாட்டை நிலை நிறுத்துவது..!

இப்படியாக தமிழகத்தை பாஜகவின் வேட்டைக் காடாக மாற்றிக் கொள்ள செம தோதாக வழிவிட்டதே இவர்கள் இருவரின் சாதனையாகும்!

மத்திய ஆட்சியாளர்களுக்கு பணிந்து,வளைந்து அடிமை சேவகம் செய்வதில் தான் இருவருக்கிடையிலும் போட்டா போட்டி!

இந்த லட்சணத்தில் முதலமைச்சர் பதவிக்கு இருவருக்கும் போட்டியாம்!

இரண்டு பேரடிமைகளில் எந்த பேரடிமையை ஆதரிப்பது என்பதில் மற்ற அடிமைகள் அணிபிரிந்து போஸ்டர் யுத்தம்(அட்ட கத்தி) நடத்துகிறார்கள்!

நல்ல தைரியம் தான் போங்கள்! தமிழக மக்கள் அறியாமையின் மீது அவ்வளவு அழுத்தமான நம்பிக்கை போலும்!

சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: