வியாழன், 23 ஜூலை, 2020

வனிதாவுக்கு கொலை மிரட்டல் : சூர்யா தேவி கைது!.. வீடியோ

வனிதாவுக்கு கொலை மிரட்டல் : சூர்யா தேவி கைது!மின்னம்பலம் : நடிகை வனிதா விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம், என்பதால் அதனைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த நேரத்தில் பீட்டர் பால் அவரது முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெற்றுக்கொள்ளாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புதிய சர்ச்சை கிளம்பியது.
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இது தொடர்பாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதுதான் அந்த விவகார வீடியோ

அதனைத் தொடர்ந்து எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும், வனிதாவை விமர்சித்தும் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை கஸ்தூரி, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிலரும் வனிதாவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தும் வந்தனர். அதே நேரத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகை வனிதாவும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் சூர்யா தேவி என்பவர் நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், அவரது நடத்தை குறித்தும் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களைக் கூறி யூட்யூப், ஃபேஸ்புக் தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் சிலவற்றில் வனிதாவை மிரட்டும் தொனியிலும் அவர் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அதற்கு வனிதாவும் அதே தொனியில் பதில் கூற நடிகை வனிதா, சூர்யா தேவி மீதும், சூர்யா தேவி நடிகை வனிதா மீதும் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார்களை விசாரித்த வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர். ஆனால் அதையும் மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதாவுக்கு எதிரான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்மீது பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சூர்யா தேவி, தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகை கஸ்தூரி அவருக்கு உதவி செய்திருப்பதாகவும், தனது வழக்கறிஞரின் முயற்சியால் சூர்யா தேவி ஜாமீனில் வெளிவந்துள்ளதாகவும் நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: