செவ்வாய், 21 ஜூலை, 2020

BBC தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது ..கோவாக்சின்:

கோப்புப்படம்கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் முதல் முறை சோதனைக்கான மருந்து செலுத்தப்பட்டுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ள சோதனையின் முதல்கட்டமாக, சோதனைக்கு தயாராக உள்ளவர்களின் உடல்நிலை ஆராயப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மருந்தை செலுத்தவுள்ளதாக எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் பரிசோதனை முடிவடைய 14 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில், அந்த மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என்பது உறுதியாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தடுப்பு மருந்துகள் இந்தியாவில் எவ்வாறு சோதனை செய்யப்படுகின்றன என பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (ஐசிஎம்ஆர்) ஒய்வு பெற்ற விஞ்ஞானி மாரியப்பன், ''ஒரு தடுப்பு மருந்து உருவாக நான்கு நிலைகள் இருக்கின்றன. பல்வேறு வகையான மக்கள் திரளிடம் அந்த மருந்தை சோதனை செய்து பார்க்கவேண்டும் என்பது ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலில் உள்ளது''

கருத்துகள் இல்லை: