திங்கள், 6 ஜூலை, 2020

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா! மின்னம்பலம் :  முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 1, 510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் அதே நேரம் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான பா.வளர்மதி. தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பதவி வகித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் அவருக்கு சில நாட்களாக உடல்நலக் குறைவு இருந்ததால், மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே அதிமுகவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி, குமரகுரு சதன் பிரபாகர், அர்ஜுனன் ஆகியோருக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா, அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது அக்கட்சியினரிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில், எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, மஸ்தான் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழில்

கருத்துகள் இல்லை: