சனி, 11 ஜூலை, 2020

காசக்ஸ்தானில் கொரோனவை விட கடுமையான நோய் ?


latest tamil newslatest tamil news தினமலர் :  பீஜிங்: மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 'கொரோனா வைரஸ் பற்றிய தகவலை, சீனா, மற்ற நாடுகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காதது தான், பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம்' என, அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீன துாதரகம், அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை விட ஆபத்தான நோய், கஜகஸ்தான் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,772 பேர் பலியாகி உள்ளனர். ஜூனில் மட்டும், 628 பேர் பலியாகி விட்டனர்.

கொரோனாவால் பலியானோரின் விகிதத்தை விட, இந்த புதிய நோயால் பலியானோரின் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கஜகஸ்தானில் உள்ள சீன மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கஜகஸ்தானிலிருந்து சீனாவுக்கு வருவோர் பற்றிய தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் செய்தி: இது குறித்து கஜகஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சீன துாதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மிகவும் தவறானது. உறுதி செய்யப்படாத ஒரு விஷயத்தை சீன துாதரகம் வெளியிட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உலக சுகாதார நிறுவனம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, சீனாவில், அடுத்த இரண்டு நாட்களுக்கு நேரடியாக கள ஆய்வு நடத்தி, விபரங்களை சேகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: