செவ்வாய், 30 ஜூலை, 2019

இட ஒதுக்கீடும் திராவிட முன்னேற்ற கழகமும் ... காமராஜர் எம்ஜியார் ஜெயலலிதா ...

LRJ : ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக இட ஒதுக்கீட்டில் பொருளாதார
அளவுகோலை புகுத்திய எம்ஜிஆருக்கும் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கடைசிவரை எதிர்த்து சமூகநீதியை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலைஞருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு என்ன என்பதற்கு இந்த பதிவும் அதன் கீழுள்ள
பதில்களும் இன்னும் ஒரு சாட்சி.
சமூகநீதி விஷயத்தில் எந்த இடத்திலும் ஊசலாடாமல் இருந்தவர்கள் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் அவர்கள் உருவாக்கிய திராவிடர் இயக்கமும். காலத்துக்கேற்ப, மாறிவரும் தேவைக்கேற்ப அதை மேம்படுத்தியவர்களும் இந்த மூவர் தான். இந்த மூவரின் முன்னெடுப்பாலும் நிர்பந்தத்தாலும் அதற்கு துணைபோனவர், முழுமையாய் ஒத்துழைத்தவர் காமராஜர். அதை வேறு வழியே இல்லாமல் சகித்துக்கொண்டவர்களே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். அவர்களுக்கு உண்மையில் சமூகநீதியிலும் நம்பிக்கையில்லை. இட ஒதுக்கீட்டிலும் அக்கறை இருந்ததே இல்லை. இதுவே தமிழ்நாட்டின் சமூகநீதியின் வரலாற்றுச்சுறுக்கம்.
இந்த பதிவையும் அதன் கீழுள்ள கருத்துக்களையும் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் இணைப்புகள் அனைத்தையும் அவசியம் படியுங்கள். சமூகநீதி களத்தில் கலைஞரின் தொலைநோக்குப்பார்வையின் வீச்சென்ன என்பது புரியும்.

தமிழ்நாட்டு அரசியலின் இன்றைய மிகப்பெரிய சாபக்கேடு இட ஒதுக்கீட்டை இருபத்தி ஓராம் நூற்றாண்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தேவைகள் மற்றும் நிலவரங்களுக்கேற்ப மேம்படுத்துவதற்கு தேவையான கற்பனை வளமும் கொள்கைத்தெளிவும் தொலைநோக்கும் உறுதிப்பாடும் கொண்ட கலைஞரைப்போன்ற அரசியல் ஆளுமைகள் இல்லை என்பது.
அடுத்து அவரைப்போன்றவர்கள் ஏற்கனவே பெரும்பாடுபட்டு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டுப்போயிருக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி உரிமைகளையும் திட்டங்களையும் இழக்காமல் பாதுகாத்துக்கொள்ளக்கூட வக்கற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது என்பது இரண்டாவது பிரச்சனை.
அதனால் தான் முன்னேறிய ஜாதிகளின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு மேலதிகமாக அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எந்த பெரிய எதிர்வினையும் தமிழ் சமூக மட்டத்தில் இன்றுவரை எழவில்லை. இதற்கு நேர்மாறாக, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் தம் ஏகபோகத்தை இழந்த முன்னேறிய ஜாதிகள் இந்த இட ஒதுக்கீடுகளை எதிர்த்து வரலாறு நெடுக தொடர்ந்து போராடினார்கள். அரசியலில் மட்டுமல்ல, ஊடகம், சினிமா உட்பட எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இட ஒதுக்கீட்டை அவர்கள் மூர்க்கமாய் எதிர்த்தார்கள்.
தெருவில் இறங்கி ரௌடித்தனம் செய்தார்கள். உதாரணமாக மண்டல் ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போவதாக வி பி சிங் அறிவித்ததை எதிர்த்து தலைநகர் டில்லியே போர்க்களமான காட்சிகளே சாட்சி. அதற்காக அவர் ஆட்சியை கவிழ்க்கவும் அவர்கள் தயங்கவில்லை. இன்றுவரை மண்டல் ஆணயம் பரிந்துரைத்த 27% இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழுமையாய் கொடுக்கப்படாமல் தடுத்து வருகிறார்கள்.
ஆனால் NEET முதல் முன்னேறிய ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடுவரை ஒவ்வொன்றிலும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே தமக்கிருந்த உரிமைகளை பறிகொடுத்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தெருவுக்கு வர தயாராக இல்லை. அவர்கள் வராவிட்டாலும் அவர்களை தம் சொந்த சாமர்த்தியத்தியத்தால் பாதுகாக்கவல்ல கலைஞரோ அண்ணாவோ பெரியாரோ இன்று நம்மிடம் இல்லை.
தங்கள் அப்பன்களும் தாத்தன்களும் சம்பாதித்து தம் கையில் கொடுத்துவிட்டுப்போன சமூகநீதி உரிமைகள் ஒவ்வொன்றாய் தட்டிப்பறிக்கப்பட்டும் ஓங்கோல் எருமை மேல் மழை பெய்த கதையாக எந்த எதிர்வினையும் செய்யாமல் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு தங்களுக்கான சமூகநீதியை சாகடிக்கும் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய ஆதரவாக ஓட்டுப்போடும் வாக்காளர்கள் பெருகிவிட்ட தமிழ் மாநிலத்தில் உயர்ஜாதிக்காரர்கள் எண்ணிக்கையில் மிக்ககுறைந்திருந்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களை ஏறி மிதிக்கத்தான் செய்வார்கள்.
உயர்ஜாதிகள் தமக்கான அரசியலில் என்றுமே தெளிவாக இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அடிப்படையில் ஜாதி அரசியல். அதற்கு நேர் மாறாக சூத்திரர், தலித், சிறுபான்மையினர் நெல்லிக்காய் மூட்டையாக சிதறியே கிடக்கிறார்கள். இந்த மூன்று தரப்பாரும் தம்மை சரிசெய்யாமல் இந்த மூவருக்குமே விடிவில்லை.

கருத்துகள் இல்லை: