புதன், 31 ஜூலை, 2019

உன்னாவு பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை.. உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி

மின்னம்பலம் : உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (ஜூலை 31) கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்ணின் கடிதம்: தலைமை நீதிபதி கேள்வி!
உத்தரப்  பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு 16 வயதாக இருக்கும் போது, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி தனது ஊரிலிருந்து அந்த பெண், தனது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் (அத்தை) இருவருடன் ரேபரலி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் அவரது உறவினர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் பலத்த காயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தனது குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரத்தில் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ இன்று (ஜூலை 31) வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அப்பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. எம்.எல்.ஏ, எங்களை மிரட்டி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜூலை 12ஆம் தேதி எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது வரை தலைமை நீதிபதி பார்வைக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். உன்னாவ் பாலியல் வழக்கின் விசாரணை நாளை வருவதற்குள் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் மற்றும் வழக்கறிஞரின் உடல்நிலை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: