செவ்வாய், 5 மார்ச், 2019

அதிமுக வாக்காளர்களுக்கு லஞ்சம் .. 2 ஆயிரம் வழங்குவதை தடுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் ஆர் எஸ் பாரதி ... திமுக மனு

தினகரன் : சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறி அதிமுகவினர் வாக்குசேகரிப்புக்காக 2 ஆயிரம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் மனு தந்துள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான வைகைச் செல்வன் பொதுக் கூட்டம் ஒன்றில் 28.2.2019ல் பேசிய போது, மாநில அரசால் வழங்கப்படும், தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதி உதவியான 2000 உள்பட 3,000மும் சுமார் 3 கோடி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 கோடி பேர் தங்களுடைய வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அளிப்பார்கள்.
எனவே தங்கள் கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பகிரங்கமாகப் பேசியுள்ளார். வைகைச்செல்வனின் பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது அந்தப் பேச்சு இத்துடன் சி.டி.யாக இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் களுக்கு 2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட உடனேயே, சில அரசியல் கட்சிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது முற்றிலும் தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகவே செய்யப்படுகிறது.


அத்தொகை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஆதரவாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் கட்சி கொள்கை பரப்புத் துணைச் செயலாள ரின் பேச்சின் மூலம் அது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக துஷ்பிரயோகம் செய்யப்படவுள் ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.2,000 வழங்கப்படுவது, விரைவில் வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தூண்டுவதற்காகத்தான் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இது விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு எதிரானதாகும் எனவே, இத்திட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு பயன்படப் போவதில்லை சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேற்கண்ட அரசுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்தத்தொகை, மாநிலத்தின் கருவூல நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசு கருவூலநிதி ஆளும் அ.தி.மு.க. கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயத்துக் காக வழங்கப்படுகிறது என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

எனவே தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதிப்படுத்த அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் அதற்கான படிவங்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தத் தொகை 2,000 வழங்கப்படுவதற்கான நபர்களின் பெயர்கள் அவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று நாங்கள் அறிய வந்துள்ளோம். இதன் மூலம் அரசு தன்னுடைய நிதியை அ.தி.மு.க. கட்சியின் நலனுக்காக, வாக்குகளை வாங்குவதற்காகவும், அ.தி.மு.க.  தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்திட்டத்தில் உள்ள சட்ட விரோதச் செயல்களைப் பரிசோதித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழி காட்டு நெறிகளைப் பின்பற்றி வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை அரசு வலைத்தளத்தில் பெயர்களை வெளியிடுவது போன்ற வெளிப்படையான நடைமுறை களைப் பின்பற்றி அடையாளம் கண்டு அதன்படி நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். படிவங்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் வழங்குவதைத் தடுத்து நிறுத்தும்படியும், அவர்களை நிதி உதவி வழங்குவதில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆளும் அ.தி.மு.கவின் இத்தகைய நடவடிக்கை தவறாகப் பயன்படுத்துவதற்கும், ஆளும் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்து வதற்கும் வழிவகுக்கும். இதன் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதேபோன்றுபலருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளன.

ரெண்டாயிரம் கொடுப்பது ஏழைகளை ஏமாற்றவே : காங்கிரஸ் கண்டனம்

அரசு 2000 வழங்குவது ஏழைகளை ஏமாற்றி ஓட்டு வாங்கும் மோசடி திட்டம் என்று தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா தெரிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு 2000 வழங்குவது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் மோசடித் திட்டமாகும். 2000 ரூபாயால் ஏழ்மையை ஒழிக்க முடியும் என கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பொருளாதார அறிஞருக்கான நோபல் பரிசு தான் வழங்க வேண்டும். பிரதமரிடம் நிவாரணம் வாங்க சென்று வெறுங்கையோடு திரும்பி விட்டு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றும் புது வித்தை தான் இந்த திட்டம். ஏழ்மையை ஒழிக்க முறையான அரசு நலத்திட்டங்களை அறிவிப்பதற்கு பதில் 1000, 2000 வழங்குவது ஓட்டுக்கு அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி சமூக கேடுகளை உருவாக்கும் மலிவான திட்டம். ஆகவே நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து அரசின் சதித் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: