திங்கள், 4 மார்ச், 2019

இம்ரான் கான் :நோபல் பரிசு பெற எனக்குத் தகுதியில்லை.. காஷ்மீர் மக்களின் கண்ணீர் துடைப்பவர்க்கே அந்த தகுதி?

அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு எனக்குத் தகுதியில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற எனக்குத் தகுதியில்லை: இம்ரான் கான்புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த நிலையில், அபிநந்தனை விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். கடந்த மார்ச் 1ஆம் தேதி மாலை அவர் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். எனது ஆட்சியில் இயங்கும் பாகிஸ்தான் அமைதியையும் வளர்ச்சியையும் மட்டுமே விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

அபிநந்தன் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் அதிக அளவில் பதிவிட்டுவந்தனர். இந்த கோரிக்கைக்கு இணையதளம் மூலம் நேற்று (மார்ச் 3) வரை சுமார் 3 லட்சம் பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதனைக் கண்டித்து பாஜக விமர்சனம் செய்தது.

நோபல் பரிசு குறித்த கருத்துக்கு இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 4) விளக்கம் அளித்துள்ளார். அதில், "நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அங்கு அமைதி மற்றும் துணைக்கண்டத்தின் வளர்ச்சியை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: