புதன், 6 மார்ச், 2019

தேமுதிக-அதிமுக கூட்டணி.....பேரம் தொடர்கிறது ... டபிள் கிராஸ் ? .

மின்னம்பலம் : பிரதமர் இன்று சென்னை வருவதற்கு முன்பாக
கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. ஆனால் தேமுதிகவின் நிபந்தனைக்கு அதிமுக ஒப்புக்கொள்ளாததால் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது.
தேமுதிக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுகவைவிட அதிகம் விரும்புவது பாஜகதான். ஏனெனில் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த், கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜயகாந்தின் உழைப்பை பிரதமரே பாராட்டியிருந்தார். எனவே இந்தத் தேர்தலிலும் விஜயகாந்த் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. டெல்லி தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நேரில் சந்தித்திருந்தார். பிரதமரின் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாகக் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் பாமகவுக்கு நிகராக 7+1 தொகுதி வேண்டும் என்பதில் விஜயகாந்த் விடாப்பிடியாக இருக்கிறாராம். இதுகுறித்து அதிமுக தரப்பு உறுதியேதும் தராத நிலையில், இன்று காலை பிரதமரின் பொதுக் கூட்ட வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அடுத்ததாகவே விஜயகாந்தின் கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை சொன்னதும் டென்ஷனான விஜயகாந்த், கூட்டணி அமைத்தால் ராமதாஸுக்கு அடுத்துதான் எனக்கு இடமா? என்று கோபப்பட்டிருக்கிறாராம். இதன்பின்பு அமமுகவுடனும் தேமுதிக தரப்பிலிருந்து கூட்டணி பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரின்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் இன்று காலை கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சற்று பீதியுடனே விவாதித்துள்ளனர்.
“நம்மோடு கூட்டணி அமைக்கவில்லையெனில் தேமுதிகவால் திமுகவுடனும் கூட்டணி அமைக்க முடியாது. ஏனெனில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாக நேற்றே அவர்கள் அறிவித்துவிட்டார்கள். அமமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு மட்டுமே தேமுதிகவுக்கு உள்ளது. அப்படி தேமுதிக-அமமுக இணையும் பட்சத்தில் அதனால் நம்முடைய வெற்றிதான் கடுமையாக பாதிக்கப்படும். இது திமுகவுக்கு சாதகமாகவே முடியும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆலோசனை கொஞ்சம் டென்ஷனாகவே நடந்து முடிந்திருக்கிறது.
ஆனால் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கூட்டணி அமைக்காததால் நாங்கள் தனிமரம் இல்லை. ஏனெனில் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க கூட்டணி குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எந்நேரமும் கூட்டணி குறித்து தேமுதிக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தேமுதிக இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்விக்கு, “ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது” என்று பதிலளித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: