திங்கள், 7 ஜனவரி, 2019

அதிமுக அணியில் பாமக ? அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் Vs அன்புமணி ?

அதிமுக அணி: அரக்கோணத்தில் அன்புமணி!மின்னம்பலம் :அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக தெரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவாரா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
தர்மபுரி தொகுதிக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும் மாநில அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்று அன்புமணி நிறைய வருத்தம் கொண்டுள்ளார். மேலும் தர்மபுரியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மக்கள் நலத்திட்டங்களில் எதிரொலிப்பதாக பாமகவினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் அன்புமணியை மீண்டும் தர்மபுரியில் எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும், அது அதிமுக- பாமக கூட்டணியாக இருந்தாலும் தோற்கடித்துவிட வேண்டும் என்று மாவட்ட அதிமுகவினரிடையே சபதம்போல இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் தனக்கு பாதுகாப்பான தொகுதியாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை டிக் செய்திருக்கிறாராம் அன்புமணி.
இதுகுறித்து அரக்கோணம் தொகுதி வட்டாரங்களில் விசாரித்தோம்,
“அரக்கோணம் பாமகவுக்கு பாதுகாப்பான தொகுதி இங்கே 26 % வன்னியர்களும் 24% தலித்துகளும் இருக்கிறார்கள். முதலியார் சமுதாய மக்கள் 15% பேர் அரக்கோணத்தில் இருக்கிறார்கள். இந்த வன்னியர் ஓட்டு வங்கியை நம்பியும், அதிமுகவின் கூடுதல் வன்னியர், தலித், முதலியார் ஓட்டுகளை நம்பியும் களம் காணத் திட்டமிட்டிருக்கிறார் அன்புமணி.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் ஜெயித்தார். 2004 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவின் ஆர்.வேலு வெற்றிகண்டார். திமுக கூட்டணியில் ஆர்.வேலு 3 லட்சத்து 86 ஆயிரம் ஓட்டு பெற்றார்.. அதே தேர்தலில் அதிமுக சார்பில் நின்ற சண்முகம் 2 லட்சத்து 84 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றார். 2009 தொகுதியில் திமுகவின் ஜெகத்ரட்சகன் மீண்டும் இங்கே வெற்றி கண்டார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டபோது அதிமுகவின் ஹரி அரக்கோணத்தில் 4லட்சத்து 93 ஆயிரத்து 534 ஓட்டுகள் பெற்றார். அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ 2 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 768 ஓட்டுகளைப் பெற்றார். அதேநேரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஆர்.வேலு 2 லட்சத்து 33 ஆயிரத்து 762 ஓட்டுகளைப் பெற்றார். தனித்து நின்ற காங்கிரஸ் 56 ஆயிரம் வாக்குகள் வாங்கியது
இந்தக் கணக்குப்படி பார்த்தால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக மட்டுமே பாமகவின் வாக்குகளில் கொஞ்சம் பங்களித்திருக்கும். ஆனாலும் இங்கே பாமக வலுவாக இருப்பதால்தான் 2 லட்சத்தை தாண்ட முடிந்தது. அந்த ஓட்டுகளும் அதிமுகவின் ஓட்டுகளும் சேர்ந்தால் மீண்டும் வெற்றியை வசமாக்கலாம் என்று கணக்கு போடுகிறது பாமக. அதாவது, திமுகவும் காங்கிரஸும் சேர்வதைக் காட்டிலும் அதிமுகவும் பாமகவும் அரக்கோணத்தில் அதிகம் ஸ்கோர் செய்யலாம் என்று வாக்கு விவரங்களை வைத்துக் கொண்டு ஒரு விவாதம் நடக்கிறது. இதனால் அரக்கோணம் அன்புமணிக்கு சேஃப் ஆக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அன்புமணியின் முழு கவனமும் அரக்கோணத்தின் மீது திரும்பியிருக்கிறது” என்கிறார்கள் தொகுதிக்குள்.

அரக்கோணத்தில் அன்புமணி போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளர் யார் என்ற கேள்வி இன்னும் சுவாரஸ்யமானது. திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய அரக்கோணம் தொகுதியில்தான் திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி தொகுதியும் இருக்கிறது.
திமுக சார்பில் மீண்டும் என்.ஆர். இளங்கோ களமிறங்குவாரா அல்லது அன்புமணியை எதிர்த்து ஆரம்ப கால வீர வன்னியர் பேரவையை நிறுவிய ஜெகத்ரட்சகனே களமிறங்குவாரா என்பதுதான் திமுக தரப்பில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: