வெள்ளி, 11 ஜனவரி, 2019

8ம் வகுப்பு வரை கட்டாயமாகிறதா இந்தி வழிக் கல்வி? ..ஆழம் பார்க்கும் பாஜக ..


tamil.indianexpress.com : Hindi must be made mandatory : மும்மொழி பாடத்திற்கு
முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில் ஒரு கல்வி பாலிசியை உருவாக்கியுள்ளது. அதில் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம், தேவநாகிரி மொழிக்கு வடிவமைப்பு தருதல் தொடர்பான கொள்கைகள் அடங்கிய புதிய திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளது 9 பேர் அடங்கிய கஸ்தூரி ரங்கன் கமிட்டி.
நியூ எஜூகேசன் பாலிசி (New Education Policy (NEP)) என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த திட்டம் இந்தியாவை மையப்படுத்தி, அறிவியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.
Hindi must be made mandatory – மறுப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் இந்த 9 பேர் அடங்கிய குழுவானது, தங்களின் அறிக்கையினை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதி மனிதவளத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இது குறித்து பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிடும் போது இது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக கூறியிருந்தார் என இன்று காலையில் இருந்து செய்திகள் ஊடங்களில் வெளியாகி வந்தன.

மும்மொழி கொள்கை மற்றும் இந்தி மொழி கட்டாயம் போன்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில்,  இது தொடர்பான செய்திகள் குறித்து பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ”எந்த மொழியும் கட்டாயமாக்கப்படுவதாக அறிக்கையில் இடம் பெறவில்லை. தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி வருகின்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமூக அறிவியல் கற்றுக் கொள்ள, பிராந்திய மொழி நிச்சயம் தேவை. ஆனால் கணிதம் மற்றும் அறிவியலுக்கு அந்த பிரச்சனைகள் எதுவும் இருக்காது. 12ம் வகுப்பு வரை எந்த மொழியில் வேண்டுமானாலும் அறிவியலும் கணிதமும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதன் பாடத்திட்டங்கள் அனைத்தும் தேசம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று குழு குறிப்பிட்டுள்ளது.
அவாத்தி, போஜ்பூரி, மைதிலி போன்ற பிராந்திய மொழிகளை பள்ளியில் 5ம் வகுப்பு வரை கற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பழங்குடிகளால் பேசப்படும் எழுத்துருவற்ற மொழிகளுக்கு தேவநாகிரி மொழியின் வடிவம் கொண்டு எழுத்துருக்கள் மீள் உருவாக்கம் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: