புதன், 9 ஜனவரி, 2019

நடிகர் சக்தி மதுபோதையில் மற்றொரு கார் மீது மோதல்.. கார் பறிமுதல்.

tamilthehindu : திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி மதுபோதையில் மற்றொரு கார் மீது தனது காரை மோதியதில் பொதுமக்களால் போலீஸில் பிடித்து கொடுக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
சின்னத்தம்பி, சந்திரமுகி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் வாசு. இவரது மகன் சக்தி. திரைப்பட நடிகரான சக்தி தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். கோபாலபுரத்தில் வசித்துவரும் சக்தி, இன்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது  நண்பர் ஒருவரைப்பார்க்க தனது சொகுசுக்காரில் நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். குறுகலான அந்தச்சாலையில் முன்னே செல்வம் என்பவர் ஓட்டிச் சென்ற மாருதி ஆல்டோ காரை முந்திச்செல்ல முயன்றபோது அதில் மோதினார்.
இதையடுத்து அவர் நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது காரின் உரிமையாளர் சத்தம்போடவே பொதுமக்கள் சக்தியின் காரை மடக்கிப்பிடித்தனர். காருக்குள் யார் இருக்கிறார் என பொதுமக்கள் பார்த்தபோது நடிகர் சக்தி இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சூளைமேடு போலீஸாருக்கு தகவல் அளிக்க அங்கு வந்த சூளைமேடு போலீஸார் சக்தியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சக்தி மது அருந்தியிருந்தது தெரியவந்தவுடன் அவரை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் சூளைமேடு போலீஸார் ஒப்படைத்தனர். அண்ணா நகர் போலீஸார் சக்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மது அருந்தியிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
பின்னர் அவரை காரைவிட்டு இறங்கி காவல் நிலையத்துக்கு அழைத்தபோது காரைவிட்டு இறங்க சக்தி மறுத்தார். அவரை போலீஸார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்த லைசென்ஸ், காரின் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர் ஐபிசி மீது பிரிவு 279 மற்றும் மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவரது காரும் லைசென்ஸும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத்தை கட்டி காரை பெற்றுக்கொள்ளலாம் என போலீஸார் கூறி அனுப்பி வைத்தனர். மதுபோதையில் காரோட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமம் ஆறுமாதம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை: