வெள்ளி, 11 ஜனவரி, 2019

திமுக தொடர்ந்த வழக்கு : தாமிரபரணி அணையிலிருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கத் தடை! - உச்ச நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணிஜோயல்கலிலுல்லா.ச - விகடன் : தூத்துக்குடி அனல்மின் நிலையம் தவிர தாமிரபரணி தண்ணீரை மற்ற  தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.ஜோயல் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் 46,107 ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாகப் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த விவசாய நிலங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அப்போது இருந்த தி.மு.க அரசு, இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுப்பதற்குத் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்துக்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து தொழிற்சாலைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குக்கூட எந்தவித அனுமதியும் இல்லாத நிலையில் சட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலமாகத் தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9.2 கோடி லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு முறைகேடாக நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

தாமிரபரணி
தினந்தோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலமாகத் தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து `குடிநீர்’ என்ற பெயரில் முழுக்க முழுக்க மோசடி செய்து தொழிற்சாலைகளுக்கு 1,000 லிட்டர் தண்ணீர், வெறும் 15 ரூபாய் என அடிமட்ட விலையில் விற்று, அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து நீரை தடுக்கக் கோரி, தி.மு.க-வைச் சேர்ந்த ஜோயல் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ``ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்கக் கூடாது, அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும்’’ என்று டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று (11-ம் தேதி) உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தி.மு.க எஸ்.ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனிதா செனாய் ஆஜராகி வாதாடினார்.
விசாரணையின் முடிவில், `ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட மற்ற எந்த தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்கக் கூடாது'' என்று அதிரடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு தொடர்ந்த தி.மு.க-வின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயலிடம் பேசினோம், ``பலவருட காலமாகப் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் வேதனையில் வாழ்ந்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களின் துயர் துடைக்கவும், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் இயற்கையோடு வளமாக வாழ்வதற்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இதற்கு நிரத்தர தீர்வு கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாங்கள் இறுதிவரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: