வியாழன், 16 ஆகஸ்ட், 2018

சமச்சீரான கல்வி தந்தவர்

hinduகலைஞர் கருணாநிதி கல்வித் தளத்தில் சமூக நீதி காக்கத் தன் இறுதி நாள்வரை பாடுபட்டார். பெண்களுக்குக் கல்வி வழங்குவது  20-ம் நூற்றாண்டிலும் ஒரு சவாலாகவே இருந்தது. அதிலும் தொடக்கப் பள்ளியைத் தாண்டி பெண்களுக்குப் படிப்பு என்பது கனவாகவே இருந்தது.
இதை உணர்ந்து 8-ம் வகுப்பு வரையாவது பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த பெண்கள் திருமண வயதுக்கு வந்த பிறகு திருமணத்துக்கான உதவித் தொகையாக ரூ. 5,000  வழங்கும் திட்டத்தை 1989 ஜூன் 3 அன்று தொடங்கி வைத்தவர் கருணாநிதி. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் நடுநிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கிராமப்புறப் பள்ளிகளில் பெண்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்தது.
செயல்வழிக் கல்வி
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளி பாடப் பிரிவில் கணினிப் பாடத்தை 1999-2000 ஆண்டு தொடங்கினார் கலைஞர் கருணாநிதி. 
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளும் இத்துறையில் தடம் பதிக்க வேண்டும் என்ற சிந்தனையில் 2007- 2008 கல்வியாண்டில் 1,880 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கூடங்கள் அமைத்துத் தந்தார்.
மனப்பாட முறையை ஒழித்து, மகிழ்ச்சியுடன் விளையாடி குழந்தைகள் பயில அனைத்து மாநிலத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை செயல்வழிக் கற்றல் முறையை 2007-2008 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தினார்.  பின்னர் அது எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுத  ஆங்கில மொழிக் கூடங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன.
தமிழுக்கு முதல் இடம்
சந்தைச் சூழலைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த 2007-2008 கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குப் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான கட்டணத்திலிருந்து விலக்களித்தார்.
தமிழை ஒரு பாடமாகப் படிக்காமலேயே தமிழ்நாட்டில் ஒருவர் பள்ளிப் படிப்பை முடிக்கலாம் என்று இருந்த நிலையை மாற்ற,  ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் தமிழை முதல் மொழியாக, கட்டாய  மொழிப் பாடமாகப் பயில வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
ஏட்டிலும் சாப்பாட்டிலும்
21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக் கல்வியில் மட்டுமல்ல அனைத்து நிலையிலும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு  ஆரோக்கியமான உடல் வளர்ச்சி தேவை. இத்தகைய உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக 2007- 2008 முதல் சத்துணவுத் திட்டத்தில் வாரத்துக்கு மூன்று முட்டை வழங்கச் செய்தார்.
பள்ளிக் கல்வியின் வளர்ச்சியைக் கருத்தில் எடுத்துப் பள்ளிக் கல்விக்கெனத் தனித் துறை உருவாக்கி, பள்ளிக் கல்விக்கெனத் தனி அமைச்சரை நியமித்தது கல்வி வளர்ச்சியில் அவர் கொண்ட ஆர்வத்தின் வெளிப்பாடே.
1969 -ல் புகுமுக  (PUC) வகுப்பு வரை கட்டணமில்லாக் கல்வி என அறிவித்தார். பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தபோதிலும் வெவ்வேறு பெயருடனும் வெவ்வேறு தேர்வுகளாகவும் இருந்த காரணத்தால், குறிப்பிட்ட பாடத்திட்ட மாணவர் மனத்தில் உயர்வு மனப்பான்மையும் மற்ற மாணவர் மனத்தில் தாழ்வு மனப்பான்மையும் உருவாவது தவறு. குழந்தைப் பருவத்தில் இவ்வாறான மனப்பான்மை வேரூன்றுவது எதிர்காலச் சமூகத்துக்கு நல்லதல்ல
என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளி மாணவருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம், பத்தாம் வகுப்பு இறுதியில் ஒரே தேர்வு என்ற ‘சமச்சீர் கல்வி’ யை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். தமிழகக் கல்வி வரலாற்றில் அது ஒரு மைல் கல்.
கட்டுரையாளர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வி செய்ற்பாட்டாளர்,
தொடர்புக்கு: spcsstn@gmail.com

கருத்துகள் இல்லை: