செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

புனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்


தினத்தந்தி :இந்தியாவின் இரண்டாவது பெரிய கூட்டுறவு வங்கியான காஸ்மோஸ் வங்கியின் சர்வர் ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 13-ல் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
 சைபர் குற்றவாளிகள் 15,000 பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.< புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில் சர்வர் இரண்டு முறை ஹேக்கிங் செய்யப்பட்டு ரூ. 94 கோடி இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என அடையாளம்
தெரியாத நபருக்கு எதிராகவும், ஹாங்காங்கை தலைமையமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திற்கு எதிராகவும் வங்கி புகார் கொடுத்துள்ளது.;
புனே காவல் நிலையத்தில் வங்கி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் வங்கியின் சர்வர்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 13-ம் தேதிகளில் இருமுறை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சைபர் குற்றவாளிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட 14,849 பரிவர்த்தனைகளில் ரூ. 80.5 கோடி வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிவிப்ட் (SWIFT) பரிவர்த்தனையின் முறையில் ரூ. 13.92 கோடி மாற்றப்பட்டுள்ளது. திருடப்பட்ட தொகையில் ரூ. 78 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவில் 2.5 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திங்கள் கிழமை நண்பகல் 11 மணியளவில் மீண்டும் ஹேக்கர்கள் வங்கியின் சர்வரை ஹேக் செய்துள்ளனர். அப்போது ரூ. 13.92 கோடி ஹாங்காங்கில் உள்ள ஹாங்சாங் வங்கியில் உள்ள ஏஎல்எம் டிரெடிங் லிமிடெட் நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎம் சுவிட்ச் சர்வரில் மால்வேர் தாக்குதலை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பணம் திருடப்பட்டுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரின் கார்டு தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளார்கள் எனறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: