திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கோபாலபுரம் போங்க.. நேரடியாக ஸ்டாலினை சந்திக்க சென்ற அழகிரி!

என்ன விஷயம் சொல்ல போகிறார் முதல் முறை tamil.oneindia.com- Shyamsundar" : மெரினாவில் பரபரப்பை கிளப்பிவிட்டு கோபாலபுரம் சென்ற அழகிரி- வீடியோ சென்னை: அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மெரினாவில் பேசிய மு.க அழகிரி நேரடியாக ஸ்டாலினை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இது திமுகவிற்கு மிகவும் பரபரப்பான வருடமாக இருக்க போகிறது. திமுக தலைவர் கருணாநிதியை இழந்த கையோடு கட்சி மொத்தமும் மெரினாவில் இடம் கேட்டு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதோ இப்போது கட்சிக்கு உள்ளேயே பெரிய போராட்டம் ஒன்று உருவாக உள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார். இந்த பரபரப்பு பேட்டியை அளித்துவிட்டு, அழகிரி அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளார். தன்னுடைய கார் டிரைவரிடம் உடனடியாக காரை கோபாலபுரத்திற்கு செல்லும்படி கூறியுள்ளார். அழகிரி, கனிமொழியின் இல்லத்திற்கு செல்வதாகவே முதலில் திட்டம் இருந்தது. ஆனால் கடைசியில் திட்டத்தை மாற்றி கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும்படி கூறியுள்ளார்.




முதல் முறை

ஸ்டாலின் அங்கு இருப்பது அழகிரிக்கு தெரியும் என்று சொல்கிறார்கள். அழகிரி தெரிந்துதான், கோபாலபுரம் இல்லத்திற்கு செல்ல சொன்னதாக கூறப்படுகிறது. முதல்முறையாக ஸ்டாலினும், அழகிரியும் இப்படி நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். ஆம் கருணாநிதி மறைவிற்கு பின் கோபாலபுரம் இல்லத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை.



பேச வாய்ப்புள்ளது

இவர்கள் இருவரும் வீட்டிற்குள் இருக்கும் போது பேசிக்கொள்வார்களா, பேசிக்கொண்டால் என்ன பேசுவார்கள் என்பதே தற்போது திமுகவினரின் கேள்வியாக உள்ளது. இருவரிரும் ஒரே வீட்டில்தான் இன்று மாலை வரை இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கனிமொழி தவிர்த்து மற்ற முக்கிய குடும்ப உறுப்பினர்கள் இப்போது அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள். அதனால், இன்று கோபாலபுரம் வீட்டில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.



என்ன விஷயம் சொல்ல போகிறார்

அதே சமயத்தில் கோபாலபுரம் இல்லம் செல்லும் முன் அழகிரி இன்னோரு திடுக்கிடும் தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை மூன்று நாட்களில் சொல்வேன் என்றுள்ளார். தனக்கு இருக்கும் ஆதங்கம் குறித்து மூன்று நாட்களில் சொல்வேன் என்றுள்ளார். இது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: