வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மெரினா நோக்கி அழகிரி பேரணி?... வேலைகள் தொடங்கி விட்டனவாம் ..

மின்னம்பலம் : மதுரை .. “அழகிரி இன்னும் மதுரை திரும்பவில்லை. ஆனால்
அழகிரியின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய இசக்கிமுத்து சென்னையில் இருந்து மதுரை திரும்பிவிட்டார். இசக்கிமுத்து என்றால் அழகிரி வட்டாரத்தில் அறியாதவர்களே கிடையாது. 38 வருடமாக அழகிரியோடு எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர். அழகிரி மதுரையில் முரசொலி பணிக்காக வந்தபோதில் இருந்து அவரோடு இருப்பவர் இசக்கிமுத்து. இன்றைக்கும் ஒரு நாளைக்கு பத்து முறையாவது இசக்கிமுத்துவோடு போனில் பேசிவிடுவார் அழகிரி.
இப்படிப்பட்ட இசக்கிமுத்து திமுக செயற்குழுவுக்கு முதல் நாளான ஆகஸ்டு 13ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனை கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தார். நடப்பு அரசியல் சூழல் பற்றி பேராசிரியரோடு பேசியிருக்கிறார் இசக்கி. ‘கொஞ்ச நாள் அமைதியா இருக்கச் சொல்லுய்யா...’ என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் பேராசிரியர். இது அழகிரிக்கும் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அழகிரி அன்றுதான் மெரினாவில், ‘கலைஞரின் விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்’ என்று பேட்டி கொடுத்தார் . திமுகவுக்கு திரும்புவதற்கு யார் சிபாரிசும் தேவையில்லை, தொண்டர்கள் சிபாரிசுதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அழகிரி.

அதனால் இசக்கிமுத்துவை மதுரைக்கு ஒரு அசைன்மென்ட்டோடுதான் அனுப்பி வைத்திருக்கிறார். அதாவது கலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறுதான் இசக்கிமுத்து, மன்னன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு அனுப்பியிருக்கிறார்.
’ அப்பா காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான அப்பாவுக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும்? ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகுதான் நான் பொறுமைய உடைச்சி பேட்டி கொடுத்தேன்.
கட்சியிலேர்ந்து நீக்கி நாலஞ்சு வருஷம் ஆகிடுச்சு. நான் தனிக்கட்டைன்னும், என் பின்னாடி யாரும் இல்லைனும் சொல்லிக்கிட்டிருக்காங்க.
அதை உடைக்கணும். தமிழ்நாடு பூரா இருக்கிற நம்ம ஆதரவாளர்களைத் திரட்டுங்க. ஒரு லட்சம் பேராவது வரணும். அவங்களோடு சேர்ந்து நான் அப்பா நினைவிடத்துக்கு போய் அஞ்சலி செலுத்தணும். இதுக்கான ஏற்பாடு பண்ணுங்க. நானே எல்லா மாவட்டத்துக் காரங்ககிட்டையும் பேசுறேன். நம்ம பலத்தைக் காட்டுவோம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார் அழகிரி.
அதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன.
அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டாலும் சரி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டாலும் சரி என்று இரு இடங்களைக் குறித்து அனுமதி கேட்க இருக்கிறார்கள்.
இப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்கிறார்கள் அழகிரி வட்டாரத்தில்’’ என்று மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதற்கு ஒரு ஆச்சரிய சிம்பலை பதிலாகப் போட்ட ஃபேஸ்புக் இன்னொரு தகவலைப் பதிவிடத் தொடங்கியது.
“இதுவும் திமுக செய்திதான். கலைஞர் இல்லாத கோபாலபுரம் இல்லத்தில் துக்கம் விசாரிக்கவும், அஞ்சலி செலுத்தவும் விஐபிகள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை தினந்தோறும் வந்துகொண்டிருக்கிறாகள். வரும் விஐபிக்களை அங்கிருக்கும் எம்.எல்.ஏ.க்களான டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் ஆகியோர் சரியாக மதிப்பதில்லை என்று முணகல் கேட்கத் தொடங்கியிருக்கிறது. தீவிர உதயநிதி ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் எப்போதும் கோபாலபுரத்தில்தான் இருக்கிறார்களாம்.
ஏதோ தாங்கள்தான் திமுக என்பதைப் போல இவர்கள் நடந்துகொள்ளும் விதம் அஞ்சலி செலுத்த வரும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம். ஏற்கனவே ஸ்டாலின் வீட்டில் இப்படித்தான் இவர்களது ராஜ்ஜியம் நடக்கிறது. இப்போது கோபாலபுரத்துக்கும் வந்துவிட்டார்கள். இதுபற்றி ஸ்டாலினிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் சில சீனியர்களே தங்களுக்குள் புலம்பி வருகிறார்கள்”

கருத்துகள் இல்லை: