புதன், 15 ஆகஸ்ட், 2018

மோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்!

மின்னம்பலம்: 72 ஆவது சுதந்திர தினத்தில் பிரதமர்
மோடி பேசியது ஏமாற்றமளிப்பதாக விமர்சித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மோடி உண்மையைப் பேசியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி. கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு சாதனைகளையும், இந்தியா உலக அரங்கில் முன்னேறியிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த நிலையில் மோடியின் உரை ஏமாற்றமளிப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். “மோடி உண்மையை பேசியிருக்கலாம். பிரதமரின் சுதந்திர தின உரையில் ஒன்றுமே இல்லை. மோடியின் உரையில் குறிப்பிட்ட உட்பொருள் எதுவும் இல்லை. ரஃபேல், வியாபம் முறைகேடு பற்றி மோடி எதுவுமே பேசவில்லை. டோக்லாம் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, தேசத்தில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வு ஆகியவை பற்றியும் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை” என்று கூறியுள்ளார்.
மோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்!“2013ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தற்போதைய பிரதமர் மோடி ஊழல், சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான நிலைமை, விவசாயிகளின் நிலை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கச் சவால் விடுத்தார். தற்போது பிரதமராக இருக்கும் அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விடுக்கும் ரஃபேல் ஊழல் தொடர்பான சவாலை ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை, , வெறுப்பு, பொய்யான வாக்குறுதிகள் ஆகிவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டுளார்.

கருத்துகள் இல்லை: