வியாழன், 26 ஜூலை, 2018

கலைஞருக்கு வீட்டிலேயே சிகிச்சை . தொண்டர்கள் பார்க்க வரவேண்டாம் என்று அறிவிப்பு

tamilthehindu :கலைஞருக்கு  உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு
ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். தொண்டர்கள் யாரும் அவரைப் பார்க்க வரவேண்டாம் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வயது மூப்பு, ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீராகி டிம்பர் 7-ம் தேதி வீடு திரும்பியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 மூச்சுவிடுவதை எளிதாக்க அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு செயற்கை சுவாசக் குழாய், செயற்கை உணவுக் குழாய் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 23-ம் தேதி அவர் வீடு திரும்பினார்.
அதன்பிறகு, கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று  ஒய்வெடுத்து வருகிறார். காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது.

கடந்த 2017 ஆகஸ்ட் 16-ம் தேதி 4-வது முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு செயற்கை உணவுக் குழாய், சுவாசக் குழாய் மாற்றப்பட்டு அன்றே வீடு திரும்பினார்.
ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருக்கும் கருணாநிதி, தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, மூச்சு விடுவதை எளிதாக்க பொருத்தப்பட்ட டிரக்யாஸ்டமி குழாய் மாற்றப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்ததும் அன்று மாலையே வீடு திரும்பினார். ஆனால், அதன்பிறகு அவருக்கு  சோர்வு ஏற்பட்டது. எனவே, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இருந்த மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக கோபாலபுரம் சென்றார். கலைஞரின்  துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு உள்ளிட்ட குடும்பத்தினர், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் கோபாலபுரம் வந்தனர்.
இதையடுத்து, கலைஞர்  உடல்நிலை மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனாலும், திமுக சார்பிலோ, கருணாநிதியின் குடும்பத்தினர் சார்பிலோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு 25-ம் தேதி சென்றிருந்த ஸ்டாலின், பகல் 12 மணி அளவில் கோபாலபுரம் வந்தார். பின்னர் கலைஞரை  சந்தித்த ஸ்டாலின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பகல் 1.05 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றார்.
இந்த சூழலில் கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று மாலை காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இன்று  வெளியிட்ட டாக்டர்கள் குழுவின் அறிக்கையில், ''திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.
அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவரகள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது.வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: