சனி, 28 ஜூலை, 2018

கலைஞரை பார்க்க வந்த 85 வயது திருவாரூர் பாட்டி,, கண்களில் கண்ணீர் நடையில் பதட்டம்

இந்த 85 வயது மூதாட்டி எங்கோ தொலை தூரத்தில் இருந்து வருகிறார்.  பேருந்தில் தட்டு தடுமாறி ஏறி வந்து சென்னை மாநகரின் பெருந்தெருக்களில் தன்னந்தனியாக எதையோ அல்லது யாரையோ தேடி பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாக ,,, 
 அப்படி என்ன இந்த மூதாட்டியின் தேடல்?
ஆம் கலைஞர் உடல் நலம் குன்றிய செய்தி இவரை கண் துஞ்ச விடாமல் துரத்துகிறது.
அவரென்ன மூதாட்டியின் நெருங்கிய உறவா?
இந்த மூதாட்டியின் சின்னஞ்சிறு உலகத்தில் தமிழகத்தின் வரலாறு தன்னை இனம் காட்டி கொள்ளாமல் மறைத்து கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது !
அந்த நெருப்பின் சுவாலைதான் அவர் கண்களில் நீராக முட்டி வழிகிறது.
தன் வாழ்நாளில் தமிழகத்தின் அன்றைய தாழ்ந்த நிலையெல்லாம் அவள் மனக்கண்களில் திரைப்படமாக ஓடிகொண்டிருப்பது தெரிகிறது!
பெண்களுக்கு சொத்துரிமை என்பது வெறும் பொருள் சம்பத்தப்பட்ட விடயம் மாத்திரம் அல்ல! அதையும் தாண்டிய அநியாயம் அது! பல ஆயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கொடுமை .. அந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சிக்காரனை எண்ணி அவள் கண்கள் கலங்குவது தெரிகிறது!
 
இட ஒதுக்கீடு இல்லையென்றால்  உயர் துறைகளில் எல்லாம் ஏழைகளின் குரல் அரங்கேறி இருக்குமா ?  சமுக நீதி தேரை நகர்த்திய கைகளை மறக்க முடியுமா?
 
ஜாதிக்கொரு வீதி என்றிருந்த தேசத்தில் எல்லா ஜாதிக்கும் வீடுகள் அதுவும் அடுத்தடுத்து .. சமத்துவபுரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கே தெரியாதது. 
சமத்துவபுரம் கண்ட சமதர்மவாதியின் குரலை இனி எப்போ கேட்பேன் என்ற வரலாற்று ஏக்கம் நெஞ்சமெல்லாம் முட்டி மோதுகிறதே?
 
சுடுமணல் வீதிகளிலும் நெருப்பாய் உருகும் தார்வீதிகளிலும் மனிதனை மனிதன் சுமந்து இழுத்துக்கொண்டு அல்ல அல்ல ஓடிக்கொண்டு இருக்கும் காட்சியை கண்டு இரங்கிய ஒரே ஒரு ஆட்சியாளன் இந்தியாவிலேயே அந்த கலைஞர் மட்டும்தானே? 
கம்யுனிஸ்டுகள் ஆண்ட மாநிலங்களும் அதை முப்பது கொடும் ஆண்டுகள் வரை கண்டுகொள்ளவில்லையே?
 
நீ வெறும் மங்கை கூட இல்லை என்று கொச்சை வார்த்தைகளுக்கும் கேலிகளுக்கும் ஆளானவர்களை திருநங்கைகள் என்று சீர் செய்து தனி அந்தஸ்தை தந்தது .. 
அதுவும் இந்தியாவிலேயே .... அவர்தானே?
 
முழு இந்தியாவும் போலீஸ் என்றாலே ஆண்களுக்கு மட்டும்தான் என்றிருந்த காட்டு தார்பாரை பொடிப்பொடியாக்கி தமிழகத்தில் முதல் பெண் போலீசை அறிமுகப்படுத்தியது இந்த பாட்டியால் மறக்க முடியுமா?
 
தமிழக நகரங்கள் என்றாலே கூட்டம் கூட்டமாக பிச்சைகாரர்கள் என்பதுதான் அன்றைய காட்சி .. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் ... அதுவும் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலில்.!
 
பொழுது விடிந்தால் எந்த குடிசைகள் பற்றி எரிகிறதோ என்றிருந்த நிலையை மாற்றி குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உருவாக்கியது ... அதுவும் இந்தியாவிலேயே முதல் முதலாகா கலைஞர் ..
 
இவையெல்லாம் சிறு சிறு பொறிகள்தான் இன்னும் எத்தனை எத்தனை ...
சமுகத்தில் நலிந்த மக்களின் துன்பங்களை துடைப்பதற்கு ஓடி ஓடி உழைத்த ஒரு நெஞ்சம் அல்லவா அது!
பாட்டியின் நெஞ்சத்தை அறிவதற்கு உங்களுக்கும் அந்த பாட்டியின் வயது இருக்கவேண்டும் அல்லது அவரின் வாய்மொழிகளை கேட்கவேண்டும் .. வரலாறு என்றும் நல்ல மனிதர்களை சுற்றித்தான் இருக்கும்!
கலைஞரின் வரலாறு இந்திய துணைக்கண்டம் தூக்கி சாப்பிட முடியாத வைரக்கோட்டை!
ஒரு சூரியனின் கோடி சூரிய பிரகாசத்தை எழுதி காட்ட எந்த கொம்பனாலும் முடியாது!
துணைக்கண்ட வரலாறுகள் எழுதப்படும் இடங்களில் எல்லாம் 75 ஆம் ஆண்டு எமர்ஜன்சி என்றொரு மிகப்பெரிய அத்தியாயம் எழுதவேண்டி வரும் ..
அதில் கதாநாயகன் ஒரு தென்னவன் .
முழு இந்தியாவும் அடங்கி ஒடுங்கி மௌனித்து காலில் வீழ்ந்த போதில் அந்த இருட்டை கிழித்து கொண்டு ஒரு சூரியனாக எழுந்தது திமுக!
சட்டசபையிலும் மெரீனா கடற்கரையிலும் துணைக்கண்டத்தின் அடக்கு முறையை உடைத்து கொண்டு ஒரு இடிமுழக்கம் ஒலித்தது
அது ஒரு திராவிட னின் தமிழ் குரல் .... கலைஞர் ,, பின்பு தொடர்ந்தது வரலாறு ... இன்னும் எழுதவும் படிக்கவும் ஏராளம் உண்டு!
இந்த பாட்டிக்கு எனது புரட்சிகர வணக்கம்

கருத்துகள் இல்லை: