செவ்வாய், 24 ஜூலை, 2018

இந்தியாவுக்கு படையெடுக்கும் வால்மார்ட் ... 50 மொத்த விற்பனை நிலையங்களைத் தொடங்க திட்டம்!

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் வால்மார்ட்!
மின்னம்பலம:  அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 50 மொத்த விற்பனை நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட்டைக் கைப்பற்றியுள்ள நிலையில் இப்போது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளது.
இதுகுறித்து வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கிரிஷ் ஐயர் ஜூலை 23ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மொத்த விற்பனை நிலையங்களை அதிகரிக்கும் பணியில் வால்மார்ட் ஈடுபட்டுள்ளது.
இரண்டு மொத்த விற்பனை நிலையங்கள் இந்த ஆண்டிலும், எட்டு மொத்த விற்பனை நிலையங்கள் அடுத்த ஆண்டிலும், அதற்கடுத்த ஆண்டில் 10 மொத்த விற்பனை நிலையங்களும் தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 50 மொத்த விற்பனை நிலையங்களை வால்மார்ட் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 15 நிலையங்களை அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
கான்பூர், முரதாபாத், வாரனாசி, கோரக்பூர், ஷரன்பூர், லக்னோ, காசியாபாத் ஆகிய இடங்களில் ஏற்கெனவே விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டது. இவை பெஸ்ட் பிரைஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. இதே பெயரில் இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் 21 மொத்த விற்பனை நிறுவனங்கள் ஏற்கெனவே வால்மார்ட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: