வியாழன், 26 ஜூலை, 2018

தமிழக மீனவர்களின் 168 படகுகள் விடுவிப்பு .. ஊர்காவல்துறை , மன்னார், மல்லாகம், பருத்தித்துறை

tamilthehindu :எஸ்.முஹம்மது ராஃபி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் விடுவித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கேசவ் கோகலே இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசமுறைப் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இந்திய அரசின் சார்பாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலுமான 4 ஆண்டுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கப் பரிந்துரை செய்தது.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் 38 படகுகளையும், மன்னார் நீதிமன்றம் 12 படகுகள் என 50 படகுகளை முதற்கட்டமாக புதன்கிழமை மாலை விடுவித்து உத்தரவிட்டன. தொடர்ந்து வியாழக்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றம் 98 படகுகளையும், பருத்தித்துறை நீதிமன்றம் 18 படகுகளையும், மல்லாகம் நீதிமன்றம் 2 படகுகள் என மொத்தம் 168 படகுகளை விடுவித்து உத்தரவிட்டன.
முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தற்போது மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 171 விசைப்படகுகள் பராமரிப்பின்றி உள்ளதால் திரும்பப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இலங்கையில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கடந்த ஜுலை 20 ராமேசுவரத்தில் நடைபெற்ற ராமநாபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: