திங்கள், 22 ஜனவரி, 2018

அரசியல் கண்ணாடி அணிந்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள் - ஆ.ராசா

அரசியல் கண்ணாடி அணிந்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள்  - ஆ.ராசாமின்னம்பலம் : 2ஜி வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ புத்தகம் நேற்று (ஜனவரி 20) டெல்லி ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் வெளியிடப்பட்டது. புத்தகத்தை ஆ.ராசா வெளியிட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் முதலில் பேசிய பரூக் அப்துல்லா, “நானும் ஆ.ராசாவும் ஒரே கேபினெட் அமைச்சரவையில்தான் பணியாற்றினோம். நான் முதலில் ஒன்று கூற விரும்புகிறேன். ராசா சொன்னது போலவே அவர் பல அவமானங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். தற்போது அவர் இன்னும் வலிமையடைந்துள்ளார். 2ஜி பிரச்னை குறித்து இந்தப் புத்தகம் நேர்மையாகவும், நாணயமாகவும் பேசுகிறது.
வழக்கின் தீர்ப்புக்குச் சில காலம் தாமதமாகியிருந்தாலும் நீதிபதி நேர்மையான தீர்ப்பை வழங்கியுள்ளார். இன்னும் இந்த நீதித்துறை அமைப்பு நேர்மையாகச் செயல்படுகிறது. தீர்ப்பு வந்த மறுநொடியில் ராசா மேல் இருந்த அவப்பெயர் காணாமல் போனது. அதை நிரூபிக்க நீண்டகாலமானாலும் அதை ராசா சிறப்பாக எதிர்கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ராசா நீதியினாலும், அவமானங்களினாலும் பாதிக்கப்பட்டார். ஆனால் கடவுள் உள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் வெளிவந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று பல அழுத்தங்கள் வந்திருக்கும். இந்தப் புத்தகம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தப் புத்தகம் கொண்டு செல்லப்பட வேண்டும்.
தற்போது நாடு மிகப்பெரிய பிரச்னையை சந்தித்து வருகிறது. இனம், மதம், மொழி என எதுவும் நம்மைப் பிரித்துவிடக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “நான் வடக்கிலிருந்து வந்துள்ளேன். நீங்கள் தெற்கிலிருந்து வந்துள்ளீர்கள். நம்முடைய மொழி, பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஆனால், நாம் ஒரே எண்ணத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். இந்தியா ஒரே நாடாக இருந்தது. அதில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா என்று கோடுகளால் பிரித்துவிட்டார்கள். ஆனால், நம்முடைய உள்ளத்தில் அந்தக் கோடுகள் இல்லை. நமக்குள் பல பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், நாம் ஒன்றிணைந்திருந்தால்தான் இந்த தேசத்தை காப்பற்ற முடியும். இப்படி செய்தால்தான் வருங்காலத்தில் ஒரு நல்ல சந்ததியை உருவாக்க முடியும். பல பிரச்னைகளை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று முழுவதுமாகப் பேசி முடித்தார்.
இறுதியாக நிறைவுரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, “பலர் நம்பலாம்... அண்மையில் வந்த தீர்ப்புக்குப்பின் நான் உற்சாகம் அடைந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். 2ஜி வழக்கில் நான் சிறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தபோதே எனது கோபம், என் பக்கம் நியாயம், எனது உண்மைத் தன்மை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். எல்லாவற்றையும் மக்கள்முன் வைப்பது என்று தீர்மானித்தேன்.
அப்போதிலிருந்தே இது தொடர்பான தரவுகளையும், ஆவணங்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். 2015லேயே இந்தப் புத்தகத்தை எழுதி முடித்துவிட்டேன். பின் அதைப் பார்த்துப் பார்த்து திருத்தங்கள் செய்தேன். பின் ஒரு பிரபல பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட முன்வந்தது. ஆனால், திடீரென அந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. அதற்கான காரணத்தை வெளியிட விரும்பவில்லை.
இப்படியாக நான் கைவிடப்பட்ட ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்த ஜென்டில்மேன் நரேந்தர் எனக்குக் கிடைத்தார். எனது நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமான நரேந்தர் ஒருநாள் காலை உணவின்போது எனது வாதங்களைக் கேட்டார். புத்தகத்தைக்கூட அவர் அப்போது படித்திருக்கவில்லை. ஆனால், அப்போது அவர், ‘நீங்கள் இந்த அமைப்பு முறையால் வேட்டையாடப்பட்டிருக்கிறீர்கள், சூறையாடப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன். இந்தப் புத்தகத்தை நான் பதிப்பிக்கிறேன்’ என்று சொன்னார்.
அப்போது நான் அவரிடம், ‘இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இன்னும் தீர்ப்பு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தங்களுக்குச் சந்தேகமோ பயம இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்குக் காரணம் இருக்கிறது.
ஏனென்றால், நான் சிறையில் இருந்து வெளியே வந்து முதன் முதலாகச் சென்னைக்கு விமானத்தில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பலரும் என்னை ஏற இறங்க பார்த்து, ‘ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவன்’ என்று முணுமுணுத்தார்கள். நான் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நான் சென்னைக்கு வந்தபோது பைலட் என் அருகே வந்து வணக்கம் வைத்துவிட்டுப் போகிறார்.
தீர்ப்பு வராத நிலையிலும் என் மீது நம்பிக்கை வைத்து என் உண்மைகள் மீது நம்பிக்கை வைத்து இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க தானாக முன் வந்து சம்மதம் தெரிவித்தார் நரேந்தர். குற்றம் சாட்டப்பட்ட யாருமே, ‘நான் நிரபாராதி. வெளியே வந்துவிடுவேன்’ என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இதை யார் நம்புகிறார்கள்?
குறிப்பாக நான் ஊடகங்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான்காவது தூணாகிய நீங்கள் இந்த வழக்கில் மிகப்பெரும் தவறு செய்துவிட்டீர்கள். நான் கைது செய்யப்பட்டபோதே உங்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருந்தீர்கள். ஒவ்வோர் ஆவணம் வெளியிடப்பட்டபோதும் நூறு முறை ஆயிரம் முறை காட்டிக் கொண்டே இருந்தீர்கள். ஊடகங்கள் உங்கள் அனைத்துக் கடமைகளையும், எல்லா வரம்புகளையும் மீறிவிட்டீர்கள்.
இங்கே என் மதிப்புக்குரிய மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் இருக்கிறார். இம்முறை ஃப்ரண்ட் லைன் இதழில் அவர் எழுதியிருந்த கட்டுரையில் கூட சட்டம் அறியாதவர்களை நம்பவைக்கும் வகையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன” என்று குறிப்பிட்டு... சட்டப் பிரிவு 313 குறித்து நீண்ட விளக்கம் அளித்தார் ஆ.ராசா.
“நான் உங்கள் எல்லாரையும் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். நீதிபதி திரு.ஓ.பி.சைனி அவர்கள் அளித்த தீர்ப்பை முழுவதும் படியுங்கள். சி.ஏ.ஜியை முட்டாள் என்று சொன்ன தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் எல்லாம் நான் சிறைக்கு சென்றதும் எல்லாம் ராசா செய்ததுதான் என்று மாற்றிவிட்டார்கள். இந்தக் கூட்டத்திலே அதிகாரிகளும் இருக்கிறார்கள். நான் பொய்யெல்லாம் சொல்லிவிட முடியாது” என்றவர் அடுத்து கூட்டணி விஷயத்துக்கு வந்தார்.
“இன்னமும் மீடியாக்களின் பசி குறையவில்லை. ராசா மன்மோகனுக்கு எதிராக பேசுகிறார். ராசா, பிரணாப் முகர்ஜியை குறை சொல்கிறார். திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான உறவு முறிகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அரசியல் கண்ணாடி போட்டுக்கொண்டு இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள். காங்கிரஸ் கண்ணாடியோ அல்லது பாஜக கண்ணாடியோ ஏன் கம்யூனிஸ்டு கண்ணாடியோ போட்டுக் கொண்டோ படிக்காதீர்கள்.
புத்தக வெளியீட்டுக்கு முன்பாக பதிப்பாளர் நரேந்தர் எனக்கு இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் கொடுத்தார். ஒன்று எனது மேசையில் இருக்கிறது. இன்னொன்று டாக்டர் மன்மோகன் சிங்குக்காக. இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை நான் மன்மோகன் சிங் அவர்களிடமே கொடுக்க விரும்பினேன். அவர் அண்மையில் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இந்த வழக்கால் நீங்களும் உங்கள் குடும்பமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன்’ என்று குறிப்பிட்டார். அதற்காக அல்ல, நான் அவரிடம் இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை கொடுக்க விரும்பியதன் காரணம், தொலைத் தொடர்புத் துறையை மக்களுக்கானதாக மாற்ற நான் மேற்கொண்ட புரட்சிக்கு அவரே முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நான் மன்மோகன் சிங் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். மன்மோகன் மீது தவறில்லை. ஆனால், அவர் அப்போது தவறாக வழி நடத்தப்பட்டுவிட்டார். நான் மன்மோகனோடு முப்பது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். அரசியல் பற்றியும் பேசினோம். அதை உரிய நேரத்தில் சொல்லுவேன்” என்று பேசினார் ஆ.ராசா.

கருத்துகள் இல்லை: