செவ்வாய், 23 ஜனவரி, 2018

மாணவர்களுக்கு பழைய கட்டணத்திலேயே பஸ் பாஸ் வழங்கப்படும்! - தமிழக அரசு அறிவிப்பு

விகடன் - கார்த்திக்.சி : தனியார் கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் பழைய கட்டணத்திலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை 50 சதவிகிதம் அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதற்கு தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து
மாணாக்கர்களுக்கும் இலவச பயண அட்டையை வழங்கிவருகிறது. மேலும், தனியார் கல்லூரிகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கும் பழைய பேருந்து கட்டண அடிப்படையில், 50 சதவிகிதம் மானியம் வழங்கிவருகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 100 சதவிகித இலவச பயணச் சலுகையின் மூலம் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு 2,13,810 பயண அட்டைகளும், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு 35,921 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு 28,348 பயண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்தப் பின்பும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் 3.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகையுடன்கூடிய பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: