செவ்வாய், 23 ஜனவரி, 2018

பெருமாளைப் புகழ்ந்தால்கூட 'அந்தக் கூட்டம்,' திமுகவை தன் பரம எதிரியாகத்தான் கருதும்.

டான் அசோக் :ஜெகத்ரட்சகன் அறிக்கை ஆண்டாளை அல்ல, பெருமாளைப் புகழ்ந்தால்கூட 'அந்தக் கூட்டம்,' திமுகவை தன் பரம எதிரியாகத்தான் கருதும். அதையெல்லாம் விட அதில் அம்மையார் துர்கா ஸ்டாலின் குறித்து ஜெகத்ரட்சகன் கூறியிப்பது பொய் என்றால் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மை என்றால் திமுக தன்மீது தானே நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றை திமுகவும், அதன் செயல்தலைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு எதிராக இவ்வளவு ஊடகத்திரிபுகள், பிரச்சாரங்கள், வன்மங்கள் விரவிக்கிடக்கும்போதும் பெரும்புயலில் மரத்தைத் தாங்கும் வேரைப் போல சில கொள்கையாளர்கள் திமுகவைத் தாங்குவது அதில் இன்னமும் இருப்பதாக அவர்கள் நம்பும் கொள்கை எனும் ஒளிக்கீற்றால் தான். அந்த ஒளிக்கீற்றை ஜெகத்ரட்சகன்களைப் போன்ற காரிருள் மறைப்பதை திமுக தலைமை வேடிக்கை பார்த்தால், அவ்விருளில் அதன் பங்கும் உண்டென்றே கருத வேண்டியிருக்கும். திமுக என்பது கொம்பு. அந்தக் கொம்பு, வாக்கரசியல் சமரசங்களையெல்லாம் தாண்டியும் இன்றும் கூராக இருக்கக் காரணம், அதைக் கண்டு எதிரிகள் பயப்படக் காரணம், அவ்வப்போது கொள்கை எனும் பாறையில் அது தன்னை பட்டைத்தீட்டிக் கொள்வதால்தான். பாறையை சுக்கலாக உடைத்துவிட்டு ,"திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது," என வசனம் பேசுவதால் யாதொரு நன்மையும் இல்லை.

கருத்துகள் இல்லை: