ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஸ்டாலின் : ஆர் கே நகரில் தாராளமான ஏராளமான தர்மம் வென்றது

நக்கீரன்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட "தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்" வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. பாளைச் சிறையில் இருந்து வெளிவந்த தலைவர் கலைஞர் அவர்களிடம், பத்திரிக்கையாளர்கள் "தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?" என்று
கேட்டபோது, தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த ”தர்மம் வென்றது” எனக் குறிப்பிட்டார்.

அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட "தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்" வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்காளர்கள், தங்களின் விலை மதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணை நின்று, "6 ஆயிரம், 10 ஆயிரம்" போன்ற பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனைச் சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலைச் சந்தித்தது. "வாக்காளர் பட்டியல்" சரிபார்ப்பில் தொடங்கி "வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம்" விநியோகிக்கப்படுவது வரை பலமுனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டி, ஏனோதானோ என்றிருந்த நேரத்தில், உயர்நீதிமன்றத்திலும் அயராது போராடினோம்.

"ரூபாய் நோட்டுக்கள்" குத்தீட்டி போல் தேர்தல் ஜனநாயகத்தின் மார்பில் ஊடுருவி உயிருக்கே உலை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம், "நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன" என்று பாராமுகமாக இருந்ததே தவிர, பணவிநியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார இயந்திரமும் துரும்பைக் கூட எடுத்துப் போட முயற்சிக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற எந்த இடைத் தேர்தலிலும் இப்படியொரு கரும்புள்ளியை தேர்தல் ஆணையம் தனக்குத் தானே "திலகம்" என நினைத்து இட்டுக் கொண்டதில்லை என்று நடுநிலையாளர்கள் கருதுமளவிற்கு தேர்தல் ஆணையம், அதன் பிரதிநிதியான தலைமை தேர்தல் அதிகாரியும் கையறுந்த நிலையில் காரியமாற்ற இயலாமல் பரிதாபமாக நின்றதைக் காண முடிந்தது.

தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள்; சென்றார்கள். அவ்வளவுதான். "சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்கு இரும்புக் கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும் கூட, "ஹவாலா பாணியில்" வாக்குப் பதிவு தினத்தன்றே வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் மட்டுமல்ல- வானளாவிய அதிகாரங்கள் கொண்ட தேர்தல் ஆணையமும் தான்!

ஆகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, "இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி" என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: