சனி, 30 டிசம்பர், 2017

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அரசுடைமையாகிறது .... எடப்பாடி பன்னீர் அதிரடி ...

tamilthehindu :சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வீட்டை அளவிடும் பணி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் ஆய்வை ஒட்டி போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அறிவிப்பும் அடுத்தடுத்த நகர்வுகளும்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை, அவரது மறைவுக்குப் பிறகு  நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீடு அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நினைவிடமாக்கும் பணியையும் வருவாய் துறையினர் தொடங்கினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக அரசுடைமையாக்கி, நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கின.

இதற்காக இன்று காலை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தீபா வழக்கு..
போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உய ர்நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறையினர் முன்னிலையில் ஆய்வு:
போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள 2 அறைகளுக்கு வருமான வரித்துறை சீல் வைத்துள்ளது. இதனால், இன்றைய ஆய்வை வருமான வரித்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: