புதன், 27 டிசம்பர், 2017

எடப்பாடி பன்னீர் மீது பாஜக நம்பிக்கை இழந்த பாஜக... தினகரனை மீண்டும் ?

மாறும் டெல்லி ரூட்!மின்னம்பலம் :ட்விட்டுக்குப் பின்னால் உள்ள ட்விஸ்ட்!
 ஆர்.கே.நகர் இரண்டு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறு தொகுதி என்றாலும், அதன் தேர்தல் முடிவு தமிழக அரசையே அசைத்துப் பார்க்கும் வண்ணம் அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். விழாக்கள்தோறும் இந்த அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று சொல்லிவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.கே.நகர் மக்கள், ‘எங்களால் அது முடியும்’ என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் டிசம்பர் 25ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில், ஒட்டுமொத்த அதிமுகவின் தோல்விக்கும் திமுக மீது பழிபோட்ட எடப்பாடி - பன்னீர் கூட்டணி, மேலும் தினகரன் ஆதரவு நிர்வாகிகள் பலரையும் கட்சிப் பதவிகளில் இருந்தும், எம்.எல்.ஏ அல்லாதவர்களை கட்சியில் இருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில்தான் தமிழக பாஜகவின் ‘மென்ட்டர்’ என்று கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி டிசம்பர் 26 அன்று தனது ட்விட்டரில், தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் திறன் அற்றவர்கள் என்ற பொருளில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

ஆறு மாதங்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் தினகரன் ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைதான் அவர் இவ்வாறு விமர்சித்தார். உடனே இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகப் பதிலடி கொடுத்தார். ஆனால் குருமூர்த்தியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பன்னீரும், பழனிசாமியும் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவில்லை.

ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்?
ஆங்கிலத்தில் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதுபோல குருமூர்த்தி சொன்னது அவரது பெயரில் வந்த டெல்லியின் கருத்துதான் என்ற பேச்சு இப்போது அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேசப்படுகிறது. இதுபற்றி பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானவை.
‘ஆடிட்டர் குருமூர்த்தி என்றால் யார், அவருக்கு என்ன முகம்?’ என்று இப்போது கேட்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால். சில மாதங்களுக்கு முன் எடப்பாடி அணியும், பன்னீர் அணியும் தனித்தனியாக இருந்த நிலையில் இரு அணிகளும் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஆடிட்டர் குருமூர்த்தியின் அலுவலகத்தில்தான். அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் குருமூர்த்தியின் அலுவலகம் சென்று எடப்பாடி சார்பாகப் பேசியது அப்போதே செய்திகளில் அடிபட்டது.

இந்த நிலையில் அப்போது இரு அணிகளையும் இணைக்க டெல்லியின் முகமாகச் சில செயல்பாடுகளில் இறங்கினார் ஆடிட்டர். அவரே இப்போது எடப்பாடியையும் பன்னீரையும் தாக்க ஆரம்பித்திருக்கிறார் என்றால், அதுவும் டெல்லியின் வாய்ஸ்தான் என்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பே...
ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு டெல்லியின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைத்தான் குருமூர்த்தியின் கருத்துகள் எடுத்துக் காட்டுகின்றன என்று அதிமுகவில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே மத்திய உளவுத் துறை மூலம் பிரதமர் மோடிக்குத் தொகுதியின் நிலைமை தெளிவாக உணர்த்தப்பட்டது.
சமீபத்தில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்திய தினகரன் அக்கூட்டம் முடிந்ததும் சங்கம் ஹோட்டலில் தனது ஆதரவு நிர்வாகிகளிடம் ஆலோசித்தபோது, “இரட்டை இலை நமக்கு கிடைக்கும். அப்பதான் தேர்தல்ல நிற்கணும் என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள். இரட்டை இலை கிடைக்கலைன்னாலும் நாம தேர்தலில் நிக்கணும். அது தொப்பியா இருக்கலாம், இல்ல வேற எதுவுமா கூட இருக்கலாம்” என்று சொல்லியிருந்தார். ஆக, திருச்சி கூட்டம் முடிந்த கையோடு ஆர்.கே.நகரில் யாருக்கும் தெரியாமல் தனது களப் பணிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார் தினகரன்.
இதையெல்லாம் ஸ்மெல் செய்த மத்திய உளவுத் துறை ஆர்.கே.நகரில் தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியது.
குமரியில் கோடிட்ட மோடி!
இதற்கிடையில் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பு குமரியில் ஓகி புயல் பாதிப்புகளைப் பார்வையிட வந்தார் பிரதமர் மோடி. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரை வரவேற்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது நிவாரணம் பற்றிய விஷயங்கள் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமியிடம், இடைத்தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் மோடி. அதற்கு எடப்பாடி, “எங்கள் அணி உறுதியாக ஜெயிக்கும்” என்றார். அப்போது சிரித்த மோடி, “இம்பாசிபிள்” என்று சொன்னாராம். அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ உறுத்தியதாம்.
மத்திய உளவுத் துறையின் ஆய்வுகளுக்குப் பிறகு தனக்கு வந்த விவரத்தைதான் அப்போது எடப்பாடியிடம் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் மோடி. அதன்படியே ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை தோல்வியைத் தழுவிவிட்டது.

மாறும் டெல்லி ரூட்!
இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தினகரனின் பலம் பெருகலாம் என்ற நிலையில், டெல்லியின் ரூட்டும் மாறத் தொடங்கியிருக்கிறது. உடனடியாக ஆட்சி அகன்றால் அது திமுகவுக்குச் சாதகம் ஆகலாம் என்ற நிலையில் தினகரனையும், எடப்பாடி - பன்னீர் தரப்பையும் ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை டெல்லி தொடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார். இந்த நிலையில் இப்போது ஆடிட்டர் குருமூர்த்தியும் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்.
இதனால் சசிகலா குடும்பத்தின் மேல் டெல்லி இதுவரை காட்டிவந்த கடுமை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பாஜகவின் அதிகாரபூர்வ வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஆர்.கே.நகர் தேர்தல் முடிவால் தனது ஆளுநர் ஆட்சி பற்றிய முடிவை டெல்லி மேலிடம் சற்று மீண்டும் யோசிக்கிறது. அதேநேரம் தினகரன் மீதான அணுகுமுறையில் இப்போதைக்குப் பெருத்த மாற்றம் இருக்காது’ என்கிறார்கள். அதேநேரம் இனி எடப்பாடி - ஓ.பன்னீரை வைத்து தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் நடத்த முடியும் என்ற நம்பிக்கையை டெல்லி இழந்துவிட்டது. எனவேதான், அதிமுகவில் மீண்டும் ஒரு கேம் நடத்தும் படலம் தொடங்கியுள்ளது. இந்த ட்விஸ்ட்டின் முதல்படிதான் ஆடிட்டரின் ட்விட்” என்கிறார்கள்

கருத்துகள் இல்லை: