வியாழன், 28 டிசம்பர், 2017

முத்தலாக் சட்டம் மக்களவையில் நிறைவேறியது

நக்கீரன் :  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் சட்ட மசோதா இன்று நிறைவேற்றம்! முத்தலாக் சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் எனப்படுவது இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பிற்கு எதிரானதாக இருந்தது. இஸ்லாமிய பெண் ஒருவரிடம், அவரது கணவர் தலாக் என மூன்று முறை சொன்னால் அது விவாகராத்தாக ஆகிவிடும் என்ற நடைமுறையும் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. உண்மையில், தலாக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட கால அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு தலாக்கிற்கும் இடையில் மூன்று மாதங்கள் இடைவெளி விடவேண்டும். அதுவும் பெரியவர்களின் முன்னிலையில் முறைப்படி சொல்லவேண்டும்.
ஆனால், இது காலப்போக்கில் இஸ்லாமிய பெண்களின் திருமணப் பாதுகாப்பிற்கு எதிரானதாக மாறியது. தொலைபேசி வாயிலாக ஒரே தவணையில் தலாக், தலாக், தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வது வரைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்த முறையை மாற்றக் கோரி இஸ்லாமிய பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, அது சட்டமாக இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் முத்தலாக்கை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனை, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மாலை முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்புச் சட்டம், 2017 என்ற இந்த சட்டம், முத்தலாக்கை தடைசெய்யும் விதமாக இருக்கும். இதன்மூலம், தவறு செய்பவர் மூன்று வருடங்களுக்கு பிணையில் வரமுடியாத வகையில் கைது செய்யப்படுவார்.

கருத்துகள் இல்லை: