வெள்ளி, 29 டிசம்பர், 2017

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!... புதிய ஏழைகளும் கோடிக்கணக்கானோர் ....

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!2017ஆம் ஆண்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்ட இந்தியாவின் பங்குச் சந்தையானது செயல்பாட்டு அடிப்படையில் ஆசியாவின் இரண்டாவது சிறந்த பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்தனர் என்ற விவரத்தைப் புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்துப் பார்க்கலாம்...
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.2,52,282 கோடியாக உள்ளது. இவர் 2017ஆம் ஆண்டில் தனது சொத்து மதிப்பில் ரூ. 1,11,638 கோடியைச் சேர்த்துள்ளார். சுமார் 14 கோடி சந்தாதார்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவை வாயிலாகவே முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பைப் பெருமளவில் உயர்த்தியுள்ளார். அம்பானியைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்தின் சொந்தக்காரரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.36,315 கோடிகள் உயர்ந்து, ரூ.66,085 கோடியாக உள்ளது.

இவரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஸ்டீல் தேவை அதிகரித்ததால் அதிக வருவாய் ஈட்டிய ஏர்செலார் மிட்டல் நிறுவனத் தலைவரான லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு ரூ.32,914 கோடிகள் உயர்ந்துள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது ரூ.1,25,112 கோடியாக உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன் பார்மா நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு ரூ.32,657 கோடிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. உலகின் அதிக சொத்து மதிப்பு கொண்ட 500 பணக்காரர்களின் பட்டியலில் 23 இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14,81,056.50 கோடியாகும். 2016ஆம் ஆண்டின் முடிவில் இவர்களின் சொத்து மதிப்பு ரூ.10,32,251.50 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: