ஞாயிறு, 24 டிசம்பர், 2017

2 ஜி தீர்ப்பு திமுக தொண்டர்களுக்கு பெரும் எழுச்சியை கொடுத்திருக்கிறது!

விகடன் :RAJASEKARAN K - வி.ஶ்ரீனிவாசுலு கையில் ‘முரசொலி’யுடன் கழுகார் நம்முன் ஆஜரானார். 2ஜி வழக்கின் தீர்ப்பை வைத்து 22-ம் தேதி, வெளியான ‘முரசொலி’யில், ‘வாய்மை வென்றது! பொய்மை புதைக்குழிக்குச் சென்றது’ என்று தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. ‘அன்றே சொன்னார்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் ஒரு குறிப்பும் இருந்தது. ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று எழுதி மு.க. என்று கருணாநிதி அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். ‘2ஜி வழக்கு ஆரம்பித்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.அவை அனைத்தையும் நம்மிடம் காட்டிய கழுகார், அது பற்றிய மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். ‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சி சைனிப் பெயர்ச்சியாக ஆரம்பித்துவிட்டது...” ‘‘கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கிறதே?” ‘‘ஆ.ராசாவும், கனிமொழியும் விடுதலை ஆகிவிட்டார்கள் என்ற தகவலை அன்பழகனும் ஸ்டாலினும் கருணாநிதியிடம் சொல்வதற்கு கையில் சால்வையுடன் சென்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்ததும் கருணாநிதி சிரித்தார். சால்வையை கருணாநிதியிடம் ஸ்டாலின் கொடுத்தார். அப்போது அன்பழகன், ‘2ஜி வழக்கில் கனிமொழியும் ராசாவும் விடுதலையாகிவிட்டார்கள். நாம் வென்று விட்டோம்’ என்று சொன்னார். அதே தகவலை ஸ்டாலினும் உரக்கச் சொன்னார். மீண்டும் கருணாநிதி சிரித்தார்.
பிறகு, தயாளு அம்மாளையும் இவர்கள் சந்தித்தனர். தயாளு தலை முதலிலேயே தப்பியது என்றாலும், இந்த வழக்கின் சாட்சிகளில் அவரும் ஒருவர் அல்லவா?”
‘‘அன்றைய தினம் அதிகமான பதற்றத்தில் ஸ்டாலின் இருந்ததாகச் சொல்கிறார்களே?”

‘‘ஆமாம். இந்தத் தீர்ப்பில்தான் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதாக ஸ்டாலின் நினைத்தார். ‘இது ஏதோ கனிமொழி, ராசா ஆகிய இரண்டு பேரோட பிரச்னை இல்லை. அவர்களுக்குச் சின்ன தண்டனை கொடுத்தாலும், அதனால் தி.மு.க-வுக்குத்தான் பெரிய பின்னடைவாக இருக்கும். அந்த ஒன்றைச் சொல்லியே நம்மை அழித்துவிடுவார்கள். சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்து, இனிமேல் நாம் எதைச் செய்தாலும் காயப்படுத்துவார்கள்’ என்று சொல்லி வந்தாராம் ஸ்டாலின். அவரால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தைக்கூட உற்சாகமாகச் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள். தீர்ப்பு நாள் அன்று, தனது வீட்டில் ஸ்டாலின் இருந்தார்.”

‘‘ஓஹோ!”

‘‘விடுதலை என்ற தகவல் வந்ததும் ராசாவையும் கனிமொழியையும்விட, அதிக உற்சாகம் அடைந்தது ஸ்டாலின்தானாம். டெல்லியிலிருந்து கனிமொழியும் ராசாவும் பேசியிருக்கிறார்கள். உடனே பத்திரிகை யாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் போடப்பட்ட வழக்குதான், இந்த 2ஜி வழக்கு’ என்றார். அப்போது, மீடியாக்களுக்கு கிண்டலாக ஓர் அறிவுரையையும் சொன்னார். ‘இந்த வழக்கைப் போட்டபோது எவ்வளவு பெரிதாகச் செய்தி வெளியிட்டீர்களோ, அதேபோல் இந்த விடுதலைச் செய்தியையும் வெளியிடுங்கள்’ என்றார். பத்திரிகையாளர்களும் சிரித்தார்கள்!”

‘‘ம்!”

‘‘அதற்குள் அறிவாலயத்தில் கூட்டம் கூடிவிட்டது. தனது வீட்டிலிருந்து அறிவாலயம் வந்தார் ஸ்டாலின். ‘தளபதி வருகிறார், ஸ்வீட் வாங்கி வாருங்கள்’ என்று கு.க.செல்வம் ஆட்களை அனுப்ப... அறிவாலயத்தின் அருகே இருக்கும் ஸ்வீட் கடையிலிருந்து லட்டுகளை வாங்கிவந்தார்கள். ஸ்டாலின் வந்ததும் அவருக்கு லட்டு கொடுத்தனர். சிரித்துக்கொண்டே கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்ட ஸ்டாலின், அருகில் இருந்த பூச்சி முருகனுக்கு லட்டை ஊட்டினார். அடுத்து, கு.க.செல்வத்துக்கும் ஊட்டினார். பிறகு, அன்பழகனை வரச் சொன்னார்கள். உடனே கருணாநிதியைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். பொதுவாக, கருணாநிதியை மதியம் ஒரு மணிக்குத்தான் தயாராக்குவார்கள். அதுவரை காத்திருந்து 1.20-க்குதான் அன்பழகனும் ஸ்டாலினும் சென்றார்கள். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் சென்றார்!”
‘‘மற்றவர்களைக் காணோமே?”

‘‘துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோரை டெல்லிக்கு போகச் சொல்லி விட்டார் ஸ்டாலின். அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்தார்கள். ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோரும் டெல்லி சென்றுவிட்டார்கள். இதைவிட, டெல்லிக்கு ஆ.ராசா திரட்டிச்சென்ற கூட்டம்தான் அதிகம்!”

‘‘முன்கூட்டியே, கூட்டத்தை ஆ.ராசா திரட்டிச்சென்றுவிட்டாரே?”

‘‘பலருக்கும் ஆச்சர்யமான செய்தி அதுதான். மூன்று நாள்களுக்கு முன்பே, பெரம்பலூர், அரியலூர், ஊட்டி ஆகிய வட்டாரங்களிலிருந்து தி.மு.க பிரமுகர்களை டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டார் ராசா. பெரும்கூட்டமாக அங்கு சென்று தங்கிவிட்டார்கள். ‘எப்படியும் விடுதலையாகிவிடுவேன்’ என்று ராசா சொல்லி வந்தாராம். அந்த நம்பிக்கையில்தான், அவர்களை வரச் சொன்னாராம். அதுபற்றி மத்திய உளவுத்துறை மேலிடத்துக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘தி.மு.க-வுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரப்போகிறது என்ற நம்பிக்கையால், தமிழகத்திலிருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர்’ எனச் சொல்லப்பட்டிருந்ததாம்.”

‘‘ஓஹோ!”

‘’ராசா, கனிமொழி ஆகிய இருவரையும் ஒரே விமானத்தில் வரச்சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். 23-ம் தேதி காலையில் அவர்கள் சென்னை வருகிறார்கள். அவர்களை வரவேற்க விமானநிலையம் செல்கிறார் ஸ்டாலின். அன்பழகனை அறிவாலயத்துக்கு வரச் சொல்லியிருக் கிறார்கள். அங்கு தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்ற பிறகு, அனைவரும் கோபாலபுரம் சென்று கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். இப்படி பரபரப்பாகி வருகிறது தி.மு.க.’’
‘‘ராசாவுக்குப் பதவி தரப்போகிறார்கள், கனிமொழிக்குப் பதவி தரப்போகிறார்கள் என்று செய்திகள் பரவிவருகின்றனவே?’’

‘‘இதுவும் பரப்பப்படும் செய்திகளாகத்தான் தெரிகின்றன. கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்போகிறது. அதன்பிறகு, மாவட்டக் கழகம் தொடங்கி தேர்தல்கள் நடக்கலாம். அதன்பிறகுதான், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல். அதன்பிறகு வேண்டுமானால், ஏதாவது புதிய பதவிகள் தரப்படலாம். அதுவரை புதிய அறிவிப்புகள் இருக்காது என்கிறார்கள். கட்சியைப் பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்றும்தான் அதிகாரம் உள்ள பதவிகள். செயல்தலைவராக இருக்கும்வரை, பொருளாளர் பதவியை ஸ்டாலினே வைத்துக்கொள்வார் என்கிறார்கள். ஏற்கெனவே, பொருளாளர் பதவியைக் குறிவைத்து தி.மு.க முன்னணியினர் பலரும் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஏதாவது ஓர் அறிவிப்பைச் செய்து சர்ச்சையை ஸ்டாலின் கிளறமாட்டார் என்கிறார்கள்” என்று நிறுத்திய கழுகாரிடம்,

‘‘ஒருவழியாக ஆர்.கே. நகர் தேர்தல் முடிந்துவிட்டதே?” என்றோம். தலையாட்டியபடியே அது பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஜனநாயகத்தின் கடமையை ஆர்.கே. நகர்வாசிகள் வஞ்சகம் இல்லாமல் ஆற்றிவிட்டார்கள். ஜெயலலிதா போட்டியிட்டபோது இருந்ததைவிட, இந்த முறை அதிகமான அளவு வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்களிப்பதில் மக்களுக்கு இருந்த ஆர்வத்தைப் பாராட்டத்தான் வேண்டும்’’ என்று பீடிகை போட்ட கழுகார், ‘இனி இன்னொரு இடைத்தேர்தல் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரக்கூடாது’ என்று மக்களே ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. அவ்வளவு அமைதி, அவ்வளவு ஒழுக்கம். பொதுமக்கள் சத்தமாகக்கூட தும்மல் போடவில்லை, அதிகாரிகள் சொல்லாமலே அனைவரும் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தனர்.”

‘‘அப்படியா?”

‘‘2-ஜி தீர்ப்பு வெளியான தகவல் வாக்குச்சாவடி களில் இருந்த பூத் ஏஜென்ட்டுகளுக்குத் தெரியவந்த பின்னர், பல இடங்களில் சூழ்நிலை மாறியது. உள்ளேயே ஒருவருக்கொருவர் தீர்ப்புக் குறித்து விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். நேரம் கூடக் கூட, அவர்களுக்குள் விவாதம் சூடுபிடித்தது.’’

‘‘தேர்தல் நாளன்று மாலையிலேயே எடப்பாடியும் பன்னீரும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்களே... என்னவாம்?’’
‘‘கொடுத்த பணம், பல இடங்களில் முறையாகப் போய்ச் சேரவில்லை என்பது எடப்பாடிக்கு வந்த புகாராம். ‘ஆறு’ எனக் கணக்கிட்டுக் கொடுக்கப் பட்டது சில இடங்களில் ‘நான்கு’ மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கிறது. ‘இடையில் என்ன நடந்தது?’ எனச் சில நிர்வாகிகளிடம் கோபமாகக் கொந்தளித்தாராம் எடப்பாடி. இந்தக் குழப்பங்களால், தேர்தல் முடிவில் ஏதாவது பாதிப்பு நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் விவாதித்திருக்கிறார்கள்’’ என்றபடி கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பாரதிராஜா
படங்கள்: கே.ராஜசேகரன், வி.ஸ்ரீனிவாசுலு

கருத்துகள் இல்லை: