புதன், 27 டிசம்பர், 2017

2 ஜி கட்டுக்கதை.... வினோத் ராய் ,சு சாமி போன்ற மோசடி பேர்வழிகளின் துணையுடன் பாஜக நடத்திய நாடகம் ,,

மின்னம்பலம் :மிஹிர் ஷர்மா
‘பொய்ச் செய்தி’ என்பதன் சரியான பொருள், எது தவறான ஒன்றோ அதைப் பரபரப்பாக்கி மக்களை உண்மை என நம்ப வைப்பதாகும். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டன் குழந்தைகளைக் கடத்துவதாக வெளிவந்த செய்தி இந்த வகையைச் சார்ந்ததே. உலகமெங்கிலும் இதுபோன்ற ‘பொய்ச் செய்திகள்’ உலா வருகின்றன. இத்தகைய செய்திகள் மூலம் தவறான படிமங்களை உருவாக்க முடியும். பரபரப்பாகச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் ‘பொய்ச் செய்தி’யை உண்மைச் செய்தி போல் உலவவிட முடியும். கும்பலாக யோசிக்க வைக்க முடியும் (கும்பலாக யோசிக்கும்போது (Group Think) ஒருமித்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வதால் அக்கருத்து சரியா, தவறா என்ற விவாதத்துக்கு இடமில்லாமல் தவறான முட்டாள்தனமான நம்பிக்கைகளை உருவாக்க முடியும்).
இதன் வாயிலாக, சமூக வலைதளங்களையும், ஊடகங்களையும் பரபரப்பாக்க முடியும். இதற்கு, சிறியதொரு கதையை அது சிக்கலானதாக இருந்தாலும்கூட பிரமாண்டமான ஊழல் என நிறுவிட அதை மிகைப்படுத்தி மீண்டும் மீண்டும் பரப்ப வேண்டும். இதுதான் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரியின் மின்னஞ்சல் குறித்த விவகாரத்தில் நிகழ்ந்தது.

தேசப்பற்று மிகுந்த நம் ஆட்களுக்கு நான் ஒரு செய்தி வைத்திருக்கிறேன். இதுபோன்ற மிகைப்படுத்தல் ஒரு இந்தியக் கண்டுபிடிப்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக இக்கண்டுபிடிப்பு வேத காலத்தைச் சார்ந்தது அல்ல. அது சமீபத்தில்தான் தோன்றியது. 2010-2014 ஆண்டுகளுக்கிடையான காலகட்டத்தை யாராலெல்லாம் நினைவுகூர முடியுமோ (அவர்களில் சிலர் அக்காலகட்டத்தை மறக்க விரும்பினாலும்கூட) அவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்தான். இக்காலகட்டத்தில் நமது நாட்டின் மக்களாட்சியின் அரசியல் மொழியில் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பும் கேவலம் நடந்தேறியது. இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்கள் பொய்யை உண்மையன்று நம்ப வைக்கப்பட்டனர்.
அத்தகைய செய்திகளெல்லாம் எவ்வளவு தவறானவை என்பது 2ஜி தீர்ப்பின் வாயிலாக வெளிவந்துள்ளது என்பது ஓர் ஆறுதல். இத்தனை ஆண்டுகள் கழித்து இது நிகழ்ந்தபோதும், இப்போதாவது நிகழ்ந்ததே என்று ஆறுதல் அடையலாம். அலைக்கற்றை ‘முறைகேடு’ குறித்து ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நாம் முன்னோக்கி நகர ஒரு முக்கியமான படி. அப்படி பொய்ச்செய்தி பரப்பிய யாராவது தாங்கள் தவறான செய்தியைப் பரப்பினோம் என மன்னிப்பு கேட்க விரும்பினால் இதுதான் தக்க தருணம்.
என்ன நடந்தது என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்வோம். நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். பல லட்சம் கோடி ஊழல் நடந்தது என்று நம்ப வைக்கப்பட்டோம். உலகத்தில் எங்குமே நடக்காத ஊழல் எனவும், இதுவரை இல்லாத அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும், உண்மையிலேயே கையூட்டுப் பெற்றுக்கொண்டார்கள் எனவும் இவை நடந்தேறியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எனவும் பொய்ச் செய்திகளைப் பரப்பினார்கள். உச்ச நீதிமன்றம் 2ஜி உரிமங்களை (வெகு காலமாகப் பின்பற்றப்பட்ட கொள்கையை ஒட்டி வழங்கப்பட்டவை) ரத்து செய்ததே இந்த ஊழல் நடந்ததற்கு சாட்சி எனவும் நம்ப வைக்கப்பட்டது. இத்தனைக்கும் உச்ச நீதிமன்றம் உண்மையைப் பற்றி எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை.
இத்தனையையும் செய்தது யார்? யார் இந்தப் பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்? ‘மக்கள் நல விரும்பி’யான சுப்பிரமணியன் சுவாமி போன்றோர்தான். வினோத் ராய் போன்ற தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பின் ஊழியர்கள் ‘முறைகேடு’ நடந்ததை ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளாக வெளியிடும் வண்ணம் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள். இதை ஊழல் எதிர்ப்பு இயக்கச் செயல்பாட்டாளர்கள் (கிரண் பேடி போன்றோர்) பரப்பினர். அர்னாப் கோஸ்வாமி போன்ற ‘தைரியமான’ தொகுப்பாளர்கள் ஊழல் புரிந்தோரைத் தண்டிக்க நாட்டின் சார்பில் கூக்குரலிட்டனர்.
இவர்கள் உருவாக்கிய சூழல் எப்படி இருந்தது? நீதியரசர் சைனியின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், “பொதுமக்களின் பார்வை, வதந்திகள், ஊகங்கள், வம்பளத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது”. இப்பரப்புரையைச் சந்தேகித்தவர்களும், கேள்வி எழுப்பியவர்களும் அப்போது ஆளும் அரசின் கைக்கூலிகளாக ‘ஊழல் எதிர்ப்பாளர்களால்’ சித்திரிக்கப்பட்டனர்.

ஆனால், இன்று இந்த ‘உத்தம சூழ’லின் சாயம் வெளுத்துவிட்டது. 2ஜி ஊழல் எனக் கூறியே ஆட்சியில் அமர்ந்தவர்களிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி கேட்டதெல்லாம் கிடைத்தது, நிதியமைச்சர் பதவியைத் தவிர. பதவி, வாகனம், பாதுகாப்பு அனைத்தையும் அனுபவிக்கிறார் சுவாமி. வினோத் ராய், வங்கித் தலைவர் தேர்வு வாரியத்தையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் ஆள்கிறார். பேடி டெல்லி முதல்வராக நிறுத்தப்பட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும், புதுவை துணைநிலை ஆளுநராகக் கோலோச்சுகிறார். அர்னாப் கோஸ்வாமிக்கு ஒரு செய்தி சேனல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது என்பதை சைனி விளக்குகிறார்: “தேர்ந்தெடுத்த சில தகவல்களைக்கொண்டு கலைநயத்துடன் ஊழல் நடந்ததாக ஒரு ‘முறைகேட்டை’ உருவாக்கியுள்ளனர். பிரமாண்டமாக மிகைப்படுத்தியன் மூலம் இதைச் சாதித்துள்ளனர்.”
இந்தக் கதையை நாம் எப்படி நம்பினோம்?
ஒழுக்கம் தொடர்பான நமது பயம்தான் ‘ஊழல்’ குறித்த நமது விவாதங்களை விஷமாக்கியுள்ளது. இது இன்றளவும் தொடர்கிறது. அதனால்தான் பணமதிப்பழிப்பு போன்ற நியாயப்படுத்த முடியாத திட்டங்களைக்கூட ஊழல் ஒழிப்புக்கான நடவடிக்கை எனக் கூற முடிகிறது. இதன்மூலம் உண்மையான சீர்திருத்தங்களை (அரசு வங்கிகளைத் தனியார் மயமாக்குவது) காலவரையற்று ஒத்தி வைக்க முடிகிறது. நான் ஏற்கெனவே கூறியதுபோல இந்தியாவில் ஊழல் புரிவோர் இருப்பதாக நம்பும் நாம், நிறுவனங்கள் சரியாக கட்டமைக்கப்படவில்லை என்பதை ஏற்க மறுக்கிறோம். அது இப்போது நன்றாகத் துலங்குகிறது. நபர்களை மாற்றிய நாம் வேறு எதையும் மாற்றவில்லை. ஊழல் ஒழிப்புப் போராளிகள் மவுனமாகிவிட்டார்கள். அவர்கள் வேலைதான் முடிந்து விட்டதே.
இரண்டு எச்சரிக்கைகள்: முதலாவதாக, இந்தத் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது இதைவிடக் கடுமையானதொரு சட்டப் பிரிவின் கீழ் புதியதொரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம். அப்படி நடக்குமா என்பதை நாம் யூகிக்க முடியாது. ஆனால், நமக்கு ஒன்று நன்றாகத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததென்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மைகளை எதனாலும் மாற்ற முடியாது.
கட்டுக்கதையான 2ஜி முறைகேட்டிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? கும்பலாகச் சிந்திப்பது, ஊகங்கள் மற்றும் புரளி பேசுபவர்களுக்கு இக்கட்டுக்கதை ஓர் எச்சரிக்கை. நாம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம் என்றபோதும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உண்மைகள் நமது நம்பிக்கையை வளர்க்கின்றன.
நன்றி: பிசினஸ் ஸ்டேண்டர்டு

கருத்துகள் இல்லை: