சனி, 1 அக்டோபர், 2016

சி.யூ. வார்டில் இருந்து மாற்றப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா..! அப்போலோ அப்டேட்ஸ்

விகடன்.காம்  : அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்கின்றது மருத்துவமனை வட்டாரம். தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் கடந்துவிட்டன.‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்திருக்கிறார்கள்’ என்று நேற்று விகடன் வலைதளத்தில் ‘எக்ஸ்க்ளுசிவ்’ ஆக செய்தி வெளியானது.
 இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் இருந்து காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பல சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, நுரையீரல் தொற்று நோய்க்கு சிறப்பு மருத்துவர்களை தேடி வெளிநாடுகளுக்குப் பறந்தனர் சசிகலாவின் உறவுகள். இதையடுத்து, நேற்று மதியம் ஒருமணி அளவில் லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு வரவழைக்கப்பட்டார். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன. இது குறித்து நம்மிடம் பேசிய கார்டன் ஊழியர் ஒருவர், "தொடக்கத்தில் முதல்வர் உடல்நிலையில் இருந்த பலவித சிரமங்களை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தினர். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. நுரையீரலில் நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவித்தார். தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் முதல்வர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.  இதையடுத்து,>அப்போலோ மருத்துவர்கள்
 தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர்.
ஆனாலும் நுரையீரல் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் லண்டனின் இருந்து வரவழைக்கப்பட்டார் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு. நேற்று மதியம் முதல்வருக்கு நடந்த நுரையீரல் தொடர்பான சிறப்பு சிகிச்சையை அடுத்து திட ஆகாராமோ, வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்வதிலோ சில நாட்களுக்கு சிரமம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நேற்று சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் சி.சி.யூ. வார்டில் (கிரிட்டிக்கல் கேர் யூனிட் )  இருந்து சிறப்புக் கவனிப்பு வழங்கப்படும் எம்.சி.சி.யூ.  (மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்)  வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். முழுக்க கண்ணாடிகள் சூழ்ந்த இந்த அறையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். இன்னும் ஓரிரு நாள்களில் திட உணவுகளை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொடர் சிகிச்சையின் பலனாக இன்னும் சில தினங்களில் முதல்வர் கார்டனுக்கு திரும்புவார்" என்றார் சற்றே நிம்மதியான குரலில்.> "மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இருந்த சூழ்நிலையை காட்டிலும், நேற்று அளிக்கப்பட்ட சிகிச்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னும் ஒருசில தினங்களில் முதல்வர் இயல்பு நிலைக்கு திரும்புவார்" என்கின்றது மருத்துவமனை வட்டாரம். தொண்டர்களின் பிரார்த்தனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.< முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்!

கருத்துகள் இல்லை: