செவ்வாய், 27 செப்டம்பர், 2016

உள்ளாட்சி தேர்தல்... சசிகலா ( நடராஜன்) அமைச்சர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

மின்னம்பலம்.காம் : “நேற்று மாலை 6.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்திலிருந்த சசிகலா கீழே இறங்கி வந்திருக்கிறார். ‘வேலுமணியை வரச் சொல்லுங்க…’ என்று அதற்குமுன்பே தகவல் போயிருக்கிறது. முதல் தளத்தில் உள்ள ரிசப்ஷனில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காத்திருந்தாராம். அவரிடம் சசிகலா, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். ‘அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் எல்லோரையும் நாளைக்கே வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லிடுங்க. யாரும் மிஸ் ஆகக் கூடாது. நாள் நல்லாதான் இருக்கு. அம்மா சொல்லிட்டாங்க. 12 மணிக்குப் பிறகு எல்லோரையும் வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லுங்க…’ என்று சொல்லியிருக்கிறார். கைகளைக் கட்டியபடி நின்ற வேலுமணி, ‘சில இடங்களில் வேட்பாளரை மாற்றச்சொல்லி கட்சிக்காரங்க பிரச்னை பண்ணிட்டு இருக்காங்கம்மா..’ என்று பவ்யமாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகலா, ‘வேட்பாளர் அறிவிச்சதும் இதெல்லாம் நடக்கிறதுதானே… அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அறிவிச்சது அறிவிச்சதுதான். கட்சி அறிவிச்ச வேட்பாளருக்கு வேலை பார்க்கிறதுதான் கட்சிக்காரங்களோட வேலை. அதனால அதையெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோரையும் நாளைக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு சசிகலா என்ன யோசித்தாரோ, ‘அப்படி எங்கெல்லாம் பிரச்னை இருக்கு என்ற லிஸ்ட்டை கொண்டு வந்து கொடுங்க…’ என்றும் கேட்டிருக்கிறார்.
சசிகலாவின் உத்தரவுப்படி, நேற்று இரவோடு இரவாக வேட்பாளர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு இன்று அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்” என்ற ஸ்டேட்டஸ்தான் போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது.அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், ‘மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் பைல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டாரா?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் கேட்க… பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக டைப்பிங் செய்தது.
“அப்படி ஒரு தகவல் வந்தபடி இருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. மாநகராட்சி வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா கையெழுத்து இல்லாமல் வெளியாகியிருப்பதைப் பற்றி நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன் அல்லவா… வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்குவதற்கு நேற்று அந்தப் பட்டியலை எடுத்துப் போயிருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்களோ, ‘வெளியிலிருந்து எந்தப் பொருளும் அது பேப்பராக இருந்தால்கூட உள்ளே வரக்கூடாது. முதல்வருக்கு அதனால் எதுவும் இன்பெக்‌ஷன் வந்துவிடும். அதுக்கு நாங்க அனுமதிக்கமாட்டோம்’ என, ஸ்டிரிக்ட் ஆகச் சொல்லிவிட்டார்களாம்.

அதனால்தான் வேறுவழியில்லாமல் அவர் கையெழுத்து இல்லாமலேயே வேட்பாளர் பட்டியல் வெளி வந்தது. ஒரு கையெழுத்துப்போடவே பேப்பரை உள்ளே எடுத்துச்செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது ஃபைல்கள் எப்படி முதல்வர் இருக்கும் அறைக்குள் எடுத்துச்செல்ல முடியும். வெளியில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் சசிகலாதான் முதல்வருக்குத் தெரியப்படுத்துகிறார். சில நேரங்களில் மட்டும் முதல்வரே டி.வி.யை ஆன் செய்யச்சொல்லி பார்க்கிறார். முடிந்தவரை மருத்துவனையில் இருக்கும்போது முதல்வர் ஓய்வில்தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மட்டுமல்லாமல் சசிகலாவும் விரும்புகிறார். ‘இங்கே இருக்கிற வரைக்குமாவது அக்கா ரெஸ்ட் எடுக்கட்டும்… எதையும் கொண்டுவராதீங்க..’ என, சசிகலாவே சொல்லிவிட்டாராம். அதனால் மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் எதையும் கவனிக்கவில்லை. ரெஸ்ட் மட்டுமே எடுக்கிறார் என்று சொல்கிறார்கள் மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள்!” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “தினமும் காலையில் கோயிலுக்குப் போய்விட்டு மருத்துவமனைக்கு முதல் நபராக ஆஜராவது அமைச்சர் உதயகுமார்தான். இன்றும் அவர்தான் வந்தார். அதன்பிறகு சி.ஆர்.சரஸ்வதி வந்தார். அவர்தான், ‘அம்மா பரிபூரண நலமாக இருக்குறாங்க…’ என மீடியாவுக்கு பேட்டியும் கொடுத்துவிட்டுப் போனார். அதன்பிறகு, கையில் ஏதோ ஒரு கவருடன் அமைச்சர் வேலுமணி உள்ளே போனார். சசிகலா கேட்ட, அதிருப்தி வேட்பாளர்களின் பட்டியல் அதில் இருந்ததாகச் சொல்கிறார்கள். சர்ச்சைக்குரியவர்களை யார் பரிந்துரை செய்தார்கள் என்ற விபரங்களையும் சசிகலா கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ’நான் அக்காகிட்ட பேசிட்டு சொல்றேன்…’ என்று சொன்னாராம் சசிகலா. அந்த வேட்பாளர்களும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்கள். தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்படலாம்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது.

கருத்துகள் இல்லை: