செவ்வாய், 27 செப்டம்பர், 2016

திருவள்ளூர் அதிமுக மகளிரணி செல்வகுமாரி தீக்குளித்தார் .. மருத்துவ மனையில் அனுமதி

சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து அதிமுக திருவள்ளூர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வக்குமாரி சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 17, 19-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் 12 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்நிலையில் திருவள்ளுர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி. இவர் திருவள்ளுர் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கு சீட்டு மறுக்கப்படுவதாக கூறி செல்வக்குமாரி திங்கள்கிழமை மாலை சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான பலராமன், திருவள்ளுர் எம்பி வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தனக்கு ஏன் சீட்டு தரவில்லை. சீட் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வக்குமாரி தான் எடுத்துச் சென்ற மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. tamiloneindia.com

கருத்துகள் இல்லை: